வியாழன், 27 செப்டம்பர், 2018

நினைத்ததை முடிப்பவன் நான் நான் நான்

நினைத்ததை எப்படி முடிப்பது? ....நினைத்ததை எப்படி அடைவது?...

                            தினம் தினம் எவ்வளவோ எண்ணங்கள் வருது...போது. அதில் சில எண்ணங்கள் மட்டும் நம் மனதில் பாய் போட்டு உக்காந்துகுது.. அந்த சில எண்ணங்கள் தான் நம்ம ஆசையா மாறுது. நம்மளோட இந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறுதா?..  நிச்சயமா இல்ல. சில ஆசைகள நாமளே இது நடக்காதுனு ஒழிச்சு கட்டிருப்போம்.. சில ஆசைகள நம்ம சுத்தி இருக்குறவங்க ஒழிச்சு கட்டிருப்பாங்க. மிச்சம் மீதி இருக்குற சில ஆசைகள் போனாப்போதுனு நிறைவேறிருக்கும்...பல ஆசைகள்? நம்மோட மனசுக்குள்ள நின்னு குடைச்சல குடுத்துக்கிட்டேயிருக்கும். மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம நம்மள ஒரு வழி பண்ணிரும்.. அந்த ஆசைகள் நம் வாழ்நாள் முழுசும் மனசுக்குள்ள உக்காந்துக்கிட்டு பிராண்டிக்கிட்டே இருக்கும். நாமளும் நமக்கு விதிச்சது இவ்வளவு தான்னு நம்ம எல்லைகளை நாமளே குறுக்கிக்குவோம். உண்மையிலேயே இவ்வளவு தானா நாம? இதுக்கு தான் நாம பொறந்துருக்கோமா...?
                           இல்லை....நிச்சயமா இல்லை....குண்டு சட்டிக்குள்ள அடைக்கப்பட்டது  இல்ல நம்ம வாழ்க்கை.. நமக்காக பரந்து விரிந்த வானமும் பூமியும் காத்துக்கிட்டு இருக்கு..நம்ம வேலயெல்லாம் சிறகு விரிக்குறது மட்டும் தான். இத செய்யுறதுக்குத் தான் நாம தயங்குறோம்...எதுக்காக  தயங்குறோம்?..
                    பயம்   தான் நம்ம தயக்கத்துக்குக்  காரணம்...சிறகு விரிக்குறப்ப வலிச்சா? சிறகு சரியா விரியலைனா?  நம்ம சிறகு சின்னதா இருந்தா? நம்மளால மத்தவங்க மாரி பறக்கமுடியலைனா? இப்பிடி ஏகப்பட்ட சந்தேகங்கள் நமக்குள்ள இருந்துகிட்டு இருக்கு...

                 இந்த சந்தேகங்கள் தான் பயமா வெளிப்படுது..சந்தேகங்கள் இரத்தத்தை உறிஞ்சுற அட்டை மாதிரி...நம்ம நிம்மதி,சந்தோசம்,முயற்சி, எல்ல்லாத்தையும் உறிஞ்சிரும். இதுல இருந்து  எப்பிடி வெளில் வரதுனு யோசிச்சா போதும்.. நமக்கு முன்னாடி இருக்குற தடைகள் எல்ல்லாம் தவிடு பொடியாகிரும்..
                 எப்பிடி வெளிய வர்றதுனு தெரிஞ்சா நாங்க எதுக்கு இப்பிடி இருக்கிறோம்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது... மைண்ட் வாய்ஸ்னு நினச்சுக்கிட்டு சத்தமா பேசிக்கிட்டு இருக்கீங்க ..
              வெல், தயக்கங்கள உடச்சிட்டு, சாதனை படைக்கனும் நினைக்குறதே வெற்றிக்கான நல்ல அறிகுறி தான்.  முதல்ல நாம, நம்மள நம்பனும்... நம்மளால் முடியும்னு நம்பனும்...  இந்த உலகத்துல  யார நம்புறோமோ இல்லயோ, நம்மள முழுசா நம்பனும். நம்மள நாம நம்பலைனா வேற யாரு நம்புவா? நம்பிகை தான் முக்கியம் இங்க ... வெற்றியாளர்களாத்தான் பொறந்தோம்ங்றத மறந்திரக்கூடாது ...இடையில கொஞ்சம் பாதை மாறிட்டோம். இப்ப நாம  எந்த நிலைல இருக்குறோமோ அந்த நிலைல இருந்து முயற்சிகள தொடங்கினாப் போதும்..தொடர் முயற்சிகள் கண்டிப்பா திருவினையாகும்.

               நம்மள நம்புனா மட்டும் போதுமானு கேட்டா இல்ல ..  நம்மள நம்பத் தொடங்கிட்டாலே,  நம்ம மனசு நம்ம கனவுகளையும் ஆசகளையும் எப்பிடி அடையாலாம்னு திட்டமிட ஆரமிச்சுரும்.. நம்முடைய தீவிரமான ஆசைகள் நம்மள தன்னை நோக்கி இழுக்கும். அதனால, நம்ம மனசும் தீவிரமா, முழு உணர்வு நிலைல, திட்டங்கள  தீட்டி, அத செயல்படுத்தவும்  தொடங்கிரும்.. அப்புறமென்ன எல்லாம் சுபம் தான்..

            ஒரு திட்டம் நிறைவேற, திட்டத்தோட முழுப் பகுதியும் தெரியனும்னு அவசியமில்ல. அடுத்து என்ன செய்யனும்னு தெரிஞ்சாப் போதும். ஒவ்வொரு அடியும் நம்மள முன்னோக்கி இழுத்துட்டுப் போயிரும்.

         முழு உணர்வு நிலைனா என்னன்னா, நாம ஒருத்தர் மேல் கோவப்படுறப்ப எந்த வித தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாம, முழுமையான கோவப்படுவோம்ல அதான் முழுமையான நிலை.. சில சமயங்கள்ல பல நாட்களுக்கு அந்த கோவத்தோட வீரியம் கொஞ்சம் கூட குறையாம இருக்குமல்லவா ... ,அது மாரியான நிலை. நம்மளுடைய குறிக்கோளை அடைந்தே தீரவேண்டும் என்ற தாகத்தின் வீரியம் முழுவீச்சுல இருக்கனும்.

           இந்த மாரி தீவிரமான மனநிலைல நாம் என்ன கேட்டாலும் உடனே அது நமக்கு கிடைக்கும். நமக்கும் மேல ஒரு சக்தி இருக்குது...அது கடவுளோ இல்ல பிரபஞ்ச சக்தியோ எதுவானாலும், கண்டிப்பா நாம கேட்டத கொடுத்துத் தான் தீரும். கொடுப்பதை தவிர அதுக்கு வேற வழி கிடையாது.சோ, நாம விரும்புறத, ஆசப்படுறத, முழுசா நம்பனும்...அடுத்து  அதற்க்கேற்ப செயல் படனும்.இது இரண்ட செஞ்சாலே போதும்..நாம நினச்சது நமக்கு நடக்கும்.

           இதத்தான் அப்துல் கலாம் ஐயாவும் கனவு காணுங்கள்னு சொன்னாரு. நமக்கு அது சரியா புரியாததுனால நாம அத பெரிய விசயமா எடுத்துக்கல.. இப்ப தெரிஞ்ச பிறகு தாமதிக்காம  உடனடியாக செயல்படுவோம் . தடைகளை தகர்த்து, வெற்றியை நம் கைக்குள் அடைத்து வாகை சூடுவோம்....

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

நம் வாழ்க்கை...நம் உரிமை..

இனியாவது வாழ்வோம்..


                    நம்முடைய இந்த வாழ்வு யாரால் வாழப்படுகிறது.... ?நாம் வாழ்கிறோமா இல்லை நம்மிடத்திலிருந்து மற்றவர்கள் வாழ்கின்றார்களா? என்னைக்காச்ச்சும் நெனச்சுப் பாத்துருக்கோமா?

                  நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் இரட்டைத் தன்மை கொண்டது .நல்லது-கெட்டது, இரவு-பகல், இன்பம்-துன்பம் இப்பிடி சொல்லிகிட்டே போகலாம்.  நமது வாழ்க்கைப் பயணம் எப்பொழுதுமே நேர்கோட்டில் அமைவதில்லை...சில வளைவுகள் சில சுளிவுகள் கண்டிப்பா இருக்கும்.அப்பிடி இருந்தாத் தான் வாழ்க்கை போரடிக்காம இருக்கும்.
நெளிவு சுளிவான சமயங்கள்ல வாழ்க்கைய நாம் எப்பிடி சந்திக்கிறோம்ங்றது தான் முக்கியம். நாம் இயல்பா அத கடந்து போக முடிஞ்சா ரொம்ப நல்ல விசயம் தான். ஆனா, பெரும்பாலான சமயங்கள்ல நம்மள யாராது  அலேக்கா தூக்கி ,அந்தப் பக்கம் வச்சிர மாட்டாங்களானு தான் பாக்குறோம்...அதயே தான் எதிர் பாக்குறோம்..சார்ந்திருப்பதோ, உதவி எதிர் பாக்குறதோ தப்பு இல்லதான்..ஆனா அதே நேரம், பாரமாகிறக்கூடாதில்லயா...

                 சோ,நமக்கு வருகிற சங்கடங்கள்ல இருந்து  வெளீய வர்றதுக்கான வழிகள நாமளே நல்லா  யோசிச்சு முடிவெடுக்கனும். அதே நேரம் யோசிச்சுக்கிட்டேயும் இருக்கக்கூடாது.நாம எடுக்குற சில முடிவுகள் சரியாவும் இருக்கலாம்...தப்பாவும் இருக்கலாம் .ரெண்டுக்குமே பொறுப்பு நாம தான். பொதுவா ஒரு முடிவு எடுக்க நாம தயங்கவோ இல்ல ரொம்ப யோசிக்கவோ செய்யுறோம்னா என்ன காரணம் தெரியுமா? நாம பொறுப்பேற்கத் தயாரா இல்லங்றது தான் காரணம்.. நம்ம வாழ்க்கைக்கு நாம பொறுப்பேற்க்க மத்தவங்க முன்வரணும்னு எதிர்ப்பாக்குறோம்.அப்ப தான் மத்தவங்கள  உன் தப்புதான்னு குற்றம் சொல்லமுடியும்..இல்லையா... நம்ம வாழ்க்கைக்கு நாம பொறுப்பேற்க்காத வரைக்கும் ,நம்ம வாழ்க்கைய மத்தவங்க தான் வாழ்வாங்க...அப்புறம் உருண்டு பொரண்டு அழுது புலம்புறதுனால என்ன பிரயோசனம்..
                நம்ம வாழ்க்கைய நாம விரும்புற  மாரி அமைச்சுக்கனும் ஆச  படுற நாம அதுக்கேத்தமாரி  உழைப்ப போட்ருக்கமானு கொஞ்சம் யோசிச்சு பாத்தா எங்க  தப்பு பண்றோம்னு நம்மளுக்கே புரியும்.. நாளைக்கு நாளைக்குனு தள்ளிப் போடுற குணம், செய்யணுமாங்ற சலிப்புத்தன்மை, யாராது செஞ்சு குடுக்கமாட்டாங்களாங்ற சோம்பேறித்தனம், வெந்ததைத் தின்னுட்டு விதி வந்தா சாவோம்ங்ற மனப்பான்மை, எனக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்குதுங்ற எதிர்மறை எண்ணங்கள்..இப்பிடி சொல்லிக்கிட்டே போகலாம்.. இதெல்லாமே நம்ம தலைல நாமளே மண்ண வாரிப் போட்டுக்கிறதுக்குச் சமம்.
                     நம்மள கட்டிப் போடுற இந்த சங்கிலிகள ஒவ்வொண்ணா நாம அத்துப் போடப் போட, வாழ்க்கைல ஒவ்வொரு படியா நாம ஏறிக்கிட்டு இருக்கிறத உணர முடியும்.. முதல் முய்ற்சி என்னைக்குமே வெற்றி தராது... விடாமுயற்சி தான் வெற்றி தரும். மனக்குரங்கு நம்மள வெற்றிய ருசிக்கவிடாம எவ்வளவோ ஆட்டங் காட்டத்தான் செய்யும்.. நம்முடைய நெனப்பெல்லாம் நம்ம குறிக்கோள்ல இருந்தாப் போதும். குரங்க அடிச்சு விரட்டிறலாம்.
                நமக்கு என்ன வேணும், நாம என்ன ஆக நெனக்கிறோம்ங்றதுல தெளிவு கண்டிப்பா இருக்கணும். நாலு நாளைக்கு ஒரு தடவ இது வேணாம்..அது வேணும்னு மாத்திக்கிட்டே இருந்தா நம்மளால ஜெயிக்க முடியாது..  சோ,என்ன வேணும்ங்ற தெளிவு கண்டிப்பா இருக்கணும்.அந்த தெளிவு வந்துட்டா போதும்.  அத எப்பிடி அடையுறதுனு யோசிக்க ஆரமிச்சுருவோம்..அதுக்கு அப்புறம் நூல் பிடிச்சமாரி அப்பிடியே போனாப் போதும்...ஒவ்வொரு படிக்கட்டா ஏற ஆரமிச்சுருவோம். முடிவு? ஜெயம் தான்.

          ஜெயிக்குறதுனா என்ன? ஒரு நிலையில இருந்து அடுத்த நிலைக்கு போறது தான் ஜெயித்தல்.. இப்ப இருக்குற நிலையில இருந்து ஏற்படுகிற ஒரு மாற்றம். அவ்வளவுதான்.. சின்ன மாற்றம் கூட ஒரு வெற்றி தான். எவ்வளவோ செய்யுற நம்மளால் அந்தச் சின்ன மாற்றத்த  உருவாக்க முடியாதா என்ன?..

சிந்திப்போம்...செயல்படுவோம்...வெற்றி நமதே...

திங்கள், 17 செப்டம்பர், 2018

சந்தோசம்..வாழ்க்கையின் பலம்..

  1. வாழ்வின் பலம் அறிவோம்



                      அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது... மாதவம் செய்து கிடைத்த இந்த மனிதப் பிறவியில்  நாம் சந்தோசமாக  இருக்கிறோமா?வாழ்வை வாழ்கிறோமா?அனுபவித்து ரசிக்கிறோமா இல்லை ரசித்துதான் அனுபவிக்கிறோமா?
                    இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இல்லை என்பதே பெரும்பான்மையான பதிலாகிறது .நம்மால ஏன் சந்தோசமா இருக்க முடில?என்ன செஞ்சா சந்தோசபடுவோம்? எது நடந்தா சந்தோசபடுவோம்? என்ன கிடைச்சா சந்தோசபடுவோம்? எப்பிடி இருந்தா சந்தோசபடுவோம்?....
இந்தக் கேள்விகள என்னைக்காவது நம்மள பாத்து நாம கேட்ருக்கோமா?மாட்டோம்.... ஏன்னா நமக்கு என்ன வேணும்னு  நமக்கே  இன்னும் தெரியாது...பாக்குற எல்லாம் வேணும்னு நெனக்கிறோம்....எல்ல்லாப் பொருளுக்கும் ஆச படுறோம்...மத்தவங்ககிட்ட இருந்து வித்தியாசம இருக்கனும்னு நெனக்கிறோம்...
                     ஆனா , இதயெல்லாம் அடைய முயற்சி  செய்யுறோமானு பாத்தா.....  அதுக்கும் இல்லங்குறது தான் பதிலா நம்ம பதிலா இருக்கு... நாம நெனச்சதும் அடஞ்சிரனும்....மொத தடவையிலயே ஜெயிச்சிரனும்...நெனச்சதெல்லாம் நடக்கனும்... இப்பிடி எல்லாத்துக்கும் ஆச படுற நாம அதுக்கான  முயற்சி செய்யுறோமானா ... இல்லங்குறது தான் உண்மை.
                  நம்மளால எதுலயுமே முழுமையா எதுலயும்  கவனம் செலுத்த முடியல. வீட்டுல டீவி பாத்தோம்னா ஒரு நிமிடத்துல எத்தன  சேனல்கள நாம மாத்திக்கிட்டே இருக்கோம்... அவசரம்.... எந்த எந்த சேனல்ல என்ன என்ன நடக்குதுனு  உடனே தெரியனு நமக்கு...சோ  டக்கு டக்குனு சேனல் மாத்திக்கிட்டே இருக்கோம்... நமக்கு பிடிச்ச நிகழ்ச்சியெதயும் தவற விட்டுருவோமோனு பயம்....
                ஆசபட்டு ஒரு பொருள  வாங்குறப்ப இருக்குற சந்தோசம் வாங்கி முடிச்சதும் நமக்கு இருக்க மாட்டேங்குது.. அவசரப்பட்டுட்டோமோ...இதுக்கு பதிலா அத வாங்கிருக்கலாமோனு யோசிக்குறோம்...இந்த நிறத்துக்கு பதிலா அந்த நிற புடவை எடுத்துருக்கலாமோனு நினைக்குறோம். இத வாங்குனதுக்குப் பதிலா அத வாங்கிருக்கலாமோனு திருப்தியடையாம இருக்கோம்.  ஏன் இந்த மாரி  இருக்கோம் நாம்? எதுனால நம்மளால திருப்தி அடைய முடியல... ஏன் நம்மளால இருப்பதை வைத்து, கிடைத்ததை வச்சு மகிழ்ச்சியா இருக்க முடியல?
                  இந்த தலைமுறையோட சாபம் இது... எதிலும் திருப்தியடையா மனம்...பற்றாக்குறை மனம்...இது இல்லை...அது இல்லைனு எப்பவும் துடிச்சிக்கிட்டே இருக்குற மனம்... அதுனால தான் நம்மளால அந்த நொடியில் வாழ்க்கைய வாழமுடில....அந்த விநாடிய ரசிக்க முடியல....விளைவு,  நம்ம வாழ்க்கைய நாம என்னைக்குமே வாழ்றது இல்ல.. பெரும்பாலும் அடுத்தவர்களுக்காகவே வாழுற நாம்,  நமக்காக என்னைக்கு வாழப்போறோம்? அவன் என்னைய என்ன நினைப்பான்....இவன் நெனச்சுருவானோ....அவுங்க அப்பிடி சொல்லிட்டா என்ன பண்றது?..இவுங்க ஏதும் தப்பா நெனச்சுருவாங்களோ??... இதே எண்ணங்கள் தான் நஇப்பிடி ம்மள அந்த நொடில வாழவிடாம தடுக்குது.. எப்பவும் எதிர்காலத்துலயே  நாம வாழ்றதுனால நிகழ்காலம் நம்ம கைய விட்டு நழுவுறத கவனிக்காம கோட்டை விட்டுற்றோம்...அதுக்கு அப்புறம் உக்காந்து புலம்புறோம் எனக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்குதுனு...
                இதுல இருந்து எப்பிடி மீண்டு வர்றதுனு யோசிச்சு பாத்துருக்கோமா? நமக்கு கிடைச்ச  எல்லாத்தையும்  நாம் என்னைக்கு உணரப்போறோம்?..இந்த உலகத்துல எல்லாருக்கும் ஏதோ ஒன்னு கண்டிப்பா இயற்க்கை குடுத்துருக்கும்....சிலருக்கு காசு பணம் ...சிலருக்கு அறிவு....சிலருக்கு அழகு...சிலருக்கு ஆரோக்கியம்...சிலருக்கு குடும்ப உறவுகள் ...இப்பிடி ஏதோ ஒன்னு கண்டிப்பா எல்லார்க்கிட்டயும் இருக்கும்.
                    நம்மகிட்ட என்னலாம் இல்லனு லிஸ்ட் போடுற நேரத்துல என்னலாம் இருக்குனு நினச்சு பாத்தா போதும், நமக்கு கிடைத்த வரங்கள் தெரிய ஆரமிக்கும். அப்ப மகிழ்ச்சியை நோக்கி நாம நடக்க ஆரமிச்சுட்டோம்னு அர்த்தம். இது கிடச்சுருக்கு..அது கிடச்சுருக்குனு நினைக்குறப்பவே, அது  நமக்கு  கிடச்சதுக்கு நன்றி சொல்லப் பழகிட்டாப் போதும் நம்ம மனம் கொஞ்சம் கொஞ்சமா மகிழ்ச்சியடைய ஆரமிக்கும். இந்த மகிழ்ச்சியான நிலமல நாம என்ன  நினச்சாலும் அது நடக்க ஆரமிக்கும்.கேக்குறதுலாம் கிடைக்கும்...பிறகென்ன? வாழ்க்கை சந்தோசமயமாவே எப்பவும் இருக்கும்.... நாம ஆச பட்டமாரியே எல்லாம் கிடைக்கும்.
                  நாம சந்தோசமா இருந்தா ,வீடு சந்தோசமா  இருக்கும். வீடு சந்தோசமா இருந்தா ஊர் நல்லா இருக்கும்...ஊரு சந்தோசமா இருந்தா மாநிலம்  நல்லா இருக்கும்..மாநிலம் நல்லா இருந்தா நாடு  நல்லா இருந்தா.... இந்த உலகமே நல்லாருக்கும்....
சந்தோமா இருப்போம்....மானிட வாழ்வை வாழ்வோம்....மற்றவர்களையும் வாழ விடுவோம்...
எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே....

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

ஆவிக்குப் பிடித்த எண்.... 13

நேற்றைய பதிவின் தொடர்ச்சி:


          இத்ற்கு முந்தைய பதிவில் இயல் எண்களின் தனிச்சிறப்புகளை பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியே இந்த கட்டுரையாகும். இயல் எண்களில் ஒவ்வொரு எண்ணிற்க்கும் ஏதாவது ஒரு சிறப்பு  இருக்கிறது. சில எண்கள் எல்லோராலும் விரும்பப்படுகிறது. சில எண்கள் ராசி இல்லாத எண்கள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறது.

          எண்களின் மீதான் மூட நம்பிக்கைகள் மறைந்து கொண்டு வருகிறது. இருந்தாலும் முழுவதுமாக  மறையவில்லை. அதனால் தானோ என்னவோ எட்டு மற்றும் பதிமூன்றாம் எண்கள் ராசியில்லாத எண்களென்ற கருத்து இன்னும் முழுவதுமாக மாறவில்லை.அதிலும் பதிமூன்று என்ற எண் ஆவிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் மக்கள் இன்னும் நம்புகிறார்கள்.

         பெரிய பெரிய கட்டிடங்களில் பதிமூன்றாம் எண்ணுடைய தளம் இருப்பதில்லை. மேலும் சில நாடுகளில் கதவு இலக்க எண்ணாக பதிமூன்றை அரசாங்கமே  தருவதில்லை.இந்த நூற்றாண்டில் கூட இந்த மாதிரி சில மூடநம்பிக்கைகள்   பழக்கத்திலிருப்பது  மிகவும் வருத்தத்திற்குரியது.வாகன எண்களிலும் பதிமூன்றொ அல்லது  கூட்டுத்தொகையோ வருவதை விரும்பவில்லை.
            அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட பதிமூன்றை துரதிர்ஷ்டமான எண்ணாக எண்ணுகின்றனர் .  அதனால் பதிமூன்றாம் தேதியில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவதில்லை.   பதிமூன்றாம்  தேதியோடு வெள்ளிக்கிழமையும் சேர்ந்தால் அது சாத்தானின் நாளாகவே கருதப்படுகிறது   தீய சக்தி நிறைந்த நாளாக அது கருதப்படுகிறது.
கிட்டத்தட்ட உலகம் முழுவதும் , எல்லா கலாச்சார மக்களாலும் , பதிமூன்றாம் எண்  ராசியில்லாத  எண்ணாகவும் அச்சத்தை  ஏற்படுத்தும் எண்ணாகவே இருக்கிறது .இயேசு தனது கடைசி விருந்தில் பதிமூன்றாவதாக இருந்த ஜுடாசால் காட்டி குடுக்கப்பட்டது கூட இதற்கு ஒரு காரணாமாக இருக்கலாம்.

           ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய விண்கலங்களில் அப்போலோ 13 என்ற விண்கலம் மட்டுமே தோல்வியைத் தழுவியது என்பதை யாரும் மறந்திட முடியாது.  இந்த பதிமூன்று என்ற எண்ணை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும் மக்களுடைய இந்த மூடநம்பிக்கையை,காரணமேயில்லாத அச்சத்தை அதிகரிக்கப்படுவது போலவே இருக்கிறது. இதனால் மக்களால் இந்த பதிமூன்று நிராகரிக்கப்படும் ஒரு எண்ணாகவே இன்றும் இருந்து வருகிறது.

             படித்தவர்களும் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களும்  புகழின் உச்சியில் இருப்பவர்கள் கூட இது போன்ற மூடநம்பிக்கையிலும் அச்சத்திலும்  இருப்பது ஆச்சரியத்தையே தருகிறது.. மற்ற எண்களைப் போல் எட்டு மற்றும் பதிமூன்று ,சாதாரண எண்களே என்பதை பகுத்தறிவு கொண்டு பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.மூடநம்பிக்கை அகற்றி  ,அறிவுக்கண் திறந்து  நிகழ்வுகளை நோக்கினால் சமுதாயத்தில் இருக்கும் தேவையற்ற அச்சங்கள், பயங்கள் களையப்பட்டு சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

வியாழன், 6 செப்டம்பர், 2018

இயல் எண்களும் தனிச் சிறப்புகளும்

எண்களின் சிறப்புகள்


                 எண்கள்....ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்விலும் இணைந்திருக்கிறது. எண்களை பயன்படுத்தாதவர் எவரும் இல்லை இவ்வுலகில். அவரவர்களுக்கேற்றவாறு எண்களின் உபயோகம் வேறுபடுகிறது அன்றி, எண்கள் இன்றி மனித சமுதாயமே இல்லை என்றே கூறலாம்.
                 எண்கள், ஒன்றின் எண்ணிக்கையை குறிக்க, அளவிட உதவுகிறது. எண்களுக்கான எண்ணுருக்கள் உருவாகும் முன்பே மனிதன் தன் கைவிரல்களின் மூலம் எண்ணத் தொடங்கி விட்டான். எண்ணுருக்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் எண்ணுதல் எளிமையானது.  எழுத்தை விட எண்கள் மனிதனின் வேலையை எளிதாக்கியது.  நடைமுறையில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் எண்கள் இயற்கை எண்கள் அல்லது இயல் எண்கள் என்றழைக்கப்படும் எண்களாகும்.
                 பழந்தமிழ்ச் சமுதாயத்தில் எண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை, எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும், எண் எழுத்து இகழேல் என்ற கூற்றுக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். கணித மேதை ஆரியபட்டரின் கண்டுபிடிப்பான பூச்சியம் ,கணித உலகுக்குக் கிடைத்த பெரிய வரம்.  இன்று அராபிய எண்கள் என்று அழைக்கப்படும் 1,2,3.... .....எண்வரிசைகளை உலகிற்குத் தந்தவர்கள் இந்தியர்களே   என்பது நாம் எல்லோரும் பெருமை பட வேண்டிய விசயமாகும். எண்கள் இல்லையென்றால் கணிதமே இல்லை என்று கூறலாம். இத்தகைய பெருமை மிகு எண்களில் சில எண்களுக்கென்று உள்ள தனிச் சிறப்புகளை  பாக்கலாம்.

                  ஒன்றை (1) முதல் எண்ணாகக் கொண்டு  தொடங்கும் இயல் எண்களில் சில எண்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்ற எண்களாகும். எடுத்துக்காட்டாக மூன்று, ஐந்து, ஆறு, ஒன்பது,பதினெட்டு. இவற்றின்  சிறப்புகளை  இங்க பாக்கலாம்..

எட்டு...

         இந்த எண்ணை நிறைய பேருக்கு பிடிக்காது .இந்த எண் அபசகுனத்தை  குறிப்பதாக சிலர் எண்ணுவர். ராசியில்லாத எண் என்று சிலர் கருதுவர். அது மிகவும் தவறான கருத்தாகும். உண்மையில் இது  மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு எண். மனிதன் கருவில் இருக்கும் போது எட்டாம் மாதம் தான் முழு வளர்ச்சி அடைகிறான். அளவில் சிறிய கருப்பையில், தன் உடலை குறுக்கிக் கொண்டு குழந்தை படுத்திருக்கும் போது கருப்பை எட்டு போன்றே காணப்படும். அது போல ஒரு மனிதனின் கை அளவு கொண்டு அவன் உயரத்தை எட்டு முறை அளக்கலாம். எண்சாண் உடம்பிற்க்கு சிரசே பிரதானம் என்பதை நாம் எல்லோரும் கேள்விப் பட்டிருப்போம்.

             சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் எட்டாவது திருமுறையாக போற்றப்படுவது, மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம்.. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்  என்று போற்றப்படுகிறது இந்நூல்.

             இந்திய தத்துவமுறைகளில் ஒன்றான யோகத்தில் எட்டு முறைகள் உண்டு. அஷ்டாங்கா யோகம் என்றழைக்கப்படும் அவை,  இயமம், நியமம், ஆசனன் ,பிராணாயாமம் ,பிரத்யாஹரம், தாரானை, தியானம் ,சமாதி என்பவையே ஆகும். இந்தக் கலையை தொகுத்து வழங்கியவர் பதஞ்சலி முனிவர் ஆவார். யோகக்கலையில் சிறந்து விளங்கும் யோகிகளுக்கு அஷ்டமா சித்திகள் எளிதில் கை கூடும்.

பதினெட்டு:


           இந்த எண்ணிற்க்கு அதிக சிறப்புகளுண்டு. இந்துக்களின் சமய நூலான பகவத் கீதையின் அத்தியாயங்கள் பதினெட்டு. ஆண்கள் மட்டுமே தரிசிக்க முடிந்த சபரிமலை ஐயப்பன் கோயிலின் படிக்கட்டுகள் பதினெட்டு. தலையாய சித்தர்கள் பதினெட்டு, பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு, பதினெட்டு புராணங்கள் ,  பதினெட்டு தத்துவங்கள்,  பதினெட்டு பாடைகள் என்று பதினெட்டாம் எண்ணுக்குரிய சிறப்புகள் பல.

மூன்று

அழகான வடிவத்தைக் கொண்ட மூன்றிற்கு தனிச் சிறப்புகள் உண்டு...
மூன்று உலகங்கள்,[பூதலம்.மீதலம்.பாதலம்] , மும்மூர்த்திகள்[பிரம்மா,விஷ்ணு,சிவன்]
முத்தமிழ்,[இயல் இசை நாடகம்]
 மூன்று காலங்கள்[நிகழ் ,இறந்த,எதிர் காலங்கள்]
கடவுளின் மூன்று நிலைகள்[உருவம்,அரூவம்,அரூவுருவம்],
மூன்று முக்கிய குணங்கள்[சத்துவம்,ராயசம்,தாமசம்]
முக்கியத் தொழில்கள் [படைத்தல்,காத்தல்,அழித்தல்]
மனிதனின மூன்று ஆசைகள் [மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை] முக்கனிகள்[மா,பலா, வாழை]...

ஐந்து:

                ஐம்பெருங்காப்பியகள் [சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி]
பஞ்ச பாண்டவர்கள்,
பஞ்ச பூதங்கள்,[நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்]
ஐந்து வகை நிலவகைகள்.[குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை]..

ஒன்பது

           இந்த எண்ணை பெரும்பாலோர்  பிறரை கேலியாக பேசுவதற்கு தவறாகவே  பயன்படுத்துகின்றனர்.. உண்மையில் இந்த எண் மிகச் சிறப்பு வாய்ந்த எண்ணாகும்..ராமன் பிறந்தது   நவமியன்றுதான். அதாவது ஒன்பதாம் நாள். அந்த நாள் ,ராமநவமி என்று அழைக்கப்படுகிறது  .புத்த மதத்தில் ஒன்பது துறவிகளைக் கொண்டே முக்கிய சடங்குகள் செய்யப்படுகின்றன.
               மேற்கத்தியநாடுகள் சிலவற்றில் இந்த எண் விசேசமாகக் கருதப்படுகிறது. தங்கத்தின் தூய்மைத் தன்மை  999 என்ற அளவுகோல் கொண்டு மதிப்பிடப்படுகிறது.  இந்த ஒன்பது என்ற எண்ணை எந்த எண்ணினால் பெருக்கினாலும்,வரும் எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதே ஆகும் .வேறு எந்த எண்ணிற்கும் இந்தச்  சிறப்பு இல்லை.

.          உலக இயக்கத்திற்க்குக்  காரணமான ஆற்றல் நவசக்தி என்று சொல்லப்படுகிறது  நவம் என்றால் ஒன்பது.
 நவகிரகங்கள் [சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு சுக்கிரன்,சனி, ராகு,கேது]
 நவரசங்கள் [மகிழ்ச்சி,வருத்தம்,கோவம்,கருணை,வீரம்,சாந்தம்,அருவருப்பு சிருங்காரம்,அற்புதம் ]
நவமணிகள் [வைரம்,பவளம்,கோமேதகம்,நீலம்,மரகதம்,மாணிக்கம்,முத்து,வைடூரியம் புஷ்பராகம்]
நவதானியங்கள்[நெல்,கோதுமை,துவரை,பாசிப்பயறு,மொச்சை,எள்,கொள்ளு,உளுந்து,வேர்க்கடலை],
உடலில் உள்ள நவதுவாரங்கள் , [,இரண்டு கண்கள்,இரண்டு காதுகள்,இரண்டு நாசி துவாரங்கள்,ஒரு வாய்,இரண்டு மலத்துவாரங்கள் ]
உடலில் உள்ள ஒன்பது சக்கரங்கள் [இரத்தம்,தோல்,மாமிசம்,எலும்பு.மேதஸ்,சுக்கிலம்,மஜ்ஜை,ரோமம்,தேஜஸ் ] பெண்  தன் வயிற்றில் கரு  சுமக்கும் மாதங்கள் ஒன்பது,
 நவகண்டங்கள்,
 நவதீர்த்தங்கள் [இந்துக்களின் புனித நதிகளான,கங்கை,யமுனை,சரசுவதி,காவிரி,நர்மதை,கோதாவரி, சரயு,குமாரி, பயோஷ்னி ]
 நவராத்திரி,[துர்க்கை,இலக்குமி,சரசுவதி தேவியருக்கான ஒன்பது திருநாட்கள்]
 நவ விரதங்கள் [சிவனுக்கான விரதங்கள் ஒன்பது]
            நவம் என்றால் புதுமை என்ற அர்த்தமும் உண்டு. பாரதி தன்னுடைய கவிதைகளை நவகவிதை என்று கூறுவார்.

சுவை புதிது  பொருள் புதிது வளம் புதிது 
சொல் புதிது சோதி மிக்க நவகவிதை  என்கிறார் பாரதி.

இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்..

         மற்ற எண்களின் சிறப்புகள் அடுத்து வரும் பகுதியில் தொடரும்....

சனி, 1 செப்டம்பர், 2018

கவர்ந்திழுக்கும் கருமேகங்களும் என் கவிதைகளும்

                           என் கவிதைகள்


கல்லூரில படிக்குறப்பவே கவிதைகள் எழுதிட்டு இருந்தாலும் நான் எழுதுவேங்க்ற விசயம் எனக்கு மட்டும் தான் தெரிஞ்சிருந்தது. வெளில யார்க்கும் சொன்னது இல்ல. கேலியா  எதும் சொல்லிருவாங்களோங்ற  பயமும் தயக்கமும் தான் அதுக்கு காரணம் .பொதுவெளியில்  என்னய எப்போதும் வெளிப்படுத்திக்கத்  தயங்குவேன்.. என்ன சொல்லுவாங்களோங்ற  எண்ணம்  எப்பவும் என்னய ஒருவித தயக்கத்தோடவே வச்சிருந்தது.. இப்பவும் நான் அப்பிடித்தான் இருக்கேன்.  ஆனா இப்ப அந்த அளவுக்கு  மோசமா இல்ல. வயதுக்கேற்ற ஒரு முதிர்ச்சி, மன உறுதியெல்லாம் கொஞ்சம் வந்திருக்கு.
                             நானே மறந்து போன  எழுதும் திறனை எனக்கு ஞாபகப்படுத்துனது முகநூல். ஆரம்ப காலங்கள்ல முகநூலை  நான்வெறும்  பொழுது போக்குறதுக்குரிய இடமாத் தான் பாத்தேன்  .ரெண்டு மூணு வருசம் கழிச்சுதான் எனக்கு நானும் ஏன் எழுதக்கூடாதுனு தோண ஆரம்ச்சது. இப்ப நாலு வருசமா நான்  முகநூல்ல  என் எண்ணங்களையும், உணர்வுகளையும், வலிகளையும்  கவிதைகளாக எழுதிக்கிட்டு வர்றேன்.

                        எப்பவும் மகிழ்ச்சியாவும் ஆனந்தமாவும் வாழ நினைக்குற எனக்கு இயற்க்கை, மழை, பூனைகள், நாய்க்குட்டிகள்னா  ரொம்பபிடிக்கும். கூடவே காதலும் பிடிக்கும். காதல் தான் என் பெரும்பாலான கவிதைகளுக்கு  ஆதாரமா இருந்துகிட்டு இருக்கு. என்னுடைய முகநூல் கவிதைகள இங்க  உங்களோட பகிர்ந்துகுறதுல எனக்கு ரொம்ப சந்தோசம்.


கூடு திரும்பும்
பறவைகள்.......
நிழலாய் பிள்ளை முகம்


பெய்து
தீர்த்திருக்க வேண்டிய
பெருமழையை
சுமந்துகொண்டேயலைகிறது
கருமேகங்கள்....



இன்று மலர்ந்த பூக்களிடம்
பேசிக்கொண்டிருக்கிறேன்...
தோள்தட்டி கோபம்
சொல்கிறது
வண்ணத்துப்பூச்சி...


என் வியர்வை அருந்தி
தாகம் தீர்க்கிறது
தகித்து களைத்த கதிரவன்....

நடையாய் நடக்கிறது
மனம்
உனக்கும் எனக்குமிடையில்..

அடம் பிடிக்கும் 
குளிரை அனுப்பிவிட்டு
கண் கலங்கும்
கருமேகங்கள்...


முத்தமிட்டே
கடக்கிறது காற்று….
தலைகாலறியாது  ஆடும் பூக்கள்…


உன் பிடிக்குள் இறுகும்
என் விரல்கள்...
சிவந்து போனது இதயம்...


நீர் முத்துக்கள்
பூமி தொடும் அழகை
ரசிக்க முடியவில்லை
பிள்ளைகள் வீடு வரும் வரை...

                எப்படி இருக்குறதுன் நண்பர்களே? ....இது போல  நிறைய நிறைய என்னுடைய முகநூல் பக்கத்துல இருக்கு...விரும்புறவங்க மேகலா கருணையானந்தம்ங்ற என் சுவற்றில் பார்த்துக்கங்க..
              என் எண்ணங்களை வெளிப்படுத்த எனக்குக் கிடைத்த ஒரு வரம் என் எழுத்து... சின்னச் சின்ன வரிகளில் எண்ணங்களையும் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்த கிடைத்த நல்ல தளமா முகநூல் இருக்கு .இந்தக் கவிதைகள படிச்சுட்டு அது பற்றிய  உங்கள் கருத்துக்களை இங்க பகிர்ந்துகொள்ளுங்கள்....

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...