வியாழன், 30 ஆகஸ்ட், 2018

மறக்கப்பட்ட இந்திய டிராகுலா

                   ஆடம்பரம் ...இன்றைய கால கட்டத்தில்  எந்தப் பக்கம் திரும்பினாலும் நம் முன்னாடி வந்து நிற்க்கிறது இந்த ஆடம்பரம்...வீண் பகட்டு.... எல்லாவற்றிலும் ஆடம்பரம். இந்த பகட்டு வாழ்விற்க்கு  நாம் கொடுக்கும்  விலை நம் நிம்மதி என்பதை  நாம் உணருவதில்லை.  சில சமயங்களில்  நம்ம உயிரையும் விலையா  குடுக்க வேண்டிய நிலை வரத்தான் செய்கிறது. ஆனா  இதை உணர்பவர்கள் மிகச் சிலரே. இந்த ஆடம்பரம் என்பது இன்று நேற்று  வந்தது இல்லை.  காலம் காலமாக  மனித சமூகத்தைப் பிடித்திருக்கிற தீரா நோய்.

               அந்தக் காலத்தில் ஆடம்பர பிரியர்களாக இருந்த மன்னர்களின்  எண்ணிக்கை மிக மிக அதிகம்.  மன்னர்கள் என்றாலே ஆடம்பரம் தானே. அவர்கள் வளர்த்து விட்ட ஜமீந்தார்கள், நிலக்கிழார்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களும் தங்கள் வாழ்க்கையில் ஆடம்பரப் பிரியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
           இந்திய வரலாற்றில், சுதந்திரத்திற்க்கு முந்தைய  இந்தியாவின்  ஆல்வார் தேசத்து ராஜா ஜெய்சிங். இவர் ஆடம்பரப் பிரியர் மட்டுமல்ல அலங்காரமாகப் பேசுவதிலும்வல்லவர். பெரிய பக்திமான் போல்  ஆன்மிகமும் பேசுவார். சரியான முன்கோபி. ஆங்கில அரசை தன் கைக்குள் வைத்துக்  கொண்டு அவர்களுக்குத் தேவையான  எல்லாவற்றையும் செய்து தந்ததால், இவரின் மீது  எழுந்த குற்றச்சாட்டுக்களை ஆங்கில அரசு கண்டு கொள்ளவேயில்லை.
           இவர் புலி வேட்டைக்குச் செல்லும் போது உடன் செல்வதற்க்கென்றே ஐந்தாயிரம்  பேர்  தயாராக இருப்பர். இவர் வேட்டைக்குச் செல்வது ஒரு திருவிழா போல் நடந்திருக்கிறது.  நாற்பது யானைகளோடு வழி நெடுக மக்கள் கட்டாய வரவேற்பு தரவேண்டும் இவர்க்கு.   தங்கச் செருப்பு அணிந்து தான் வேட்டைக்குச் செல்வார். யானை,  இவர்க்கு மிகவும் பிடித்தமான விலங்கு.  யானைகளுக்கு வரக் கூடிய நோய்களுக்கான  சிகிச்சைகள்  குறித்தும் இவர் நன்கு அறிந்தவர்.
              நூற்றியைந்து  அறைகள் கொண்ட பிரம்மாண்டமான  மாளிகை ஒன்றை இவர் விஜயசாகரம் ஏரியில் கட்டினார். இவர்க்கு  உடைகளின் மீது அலாதி விருப்பம் உண்டு. சரிகை வேலைப்பாடுகள் நிறைந்த உடைகளையே பயன்படுத்துவார்.  இவரிடம் நாலாயிரம் கோட் சூட்டுகள், இரண்டாயிரம் கைத்தடிகள், ஆயிரத்து முந்நூறு ஜோடி செருப்புகள் இருந்திருக்கின்றன.
இவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்த இவரின் குணங்கள் மக்களை அதிர வைக்கும்படியாகவே இருந்திருக்கிறது. மக்களை துன்புறுத்தி இன்பம் காண்பதில் இவருக்கு நிகர் இவர் தான். அளவுக்கு அதிகமான  குரூரவெறி படைத்த சேடிஸ்ட் .
       புலிக்கூண்டிற்க்குள் சிறுவர்களை எறிந்து  புலி துரத்துவதையும் சிறுவர்களின் அலறலையும் ரசித்தவர். நுகத்தடியில் பெண்களைப் பூட்டி, ஏர் உழச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.  முதுகுத்தோல் உரிப்பது, விளையாட்டு மைதானத்தில் பந்துகளை எடுத்துப் போட பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்தல் ,அண்ணன் தங்கையை கட்டாய பாலுறவு கொள்ளச் செய்வது என்று இவருடைய வக்கிர உணர்வுகள் விசித்திரமானவை.
ஒரு பக்கம் சேடிஸ்ட்டாக இருந்துகொண்டு மறுபக்கம் சமய நூலகளை ஆழ்ந்து படித்து, அது பற்றி சிறப்பாக பேசக்கூடியவர் என்பது ஒரு பெரிய முரண். தன்னை கடவுள் என்று கூறிக்கொண்டு ஆன்மீகச் சொற்பொழிவுகளும் ஆற்றுவார். பகவத் கீதைபற்றி இவர் ஆற்றும் உரை  கேட்டு ஆங்கில அதிகாரிகள் வியந்து பாராட்டி இருக்கின்றார்கள். தான் இந்த உலகை உய்விக்க வந்த அவதாரம் என்றும், முற்பிறவியில் தான் ஞானியாக இருந்ததாலயே இப்பிறவியில் மன்னனாகப்  பிறந்ததாக தன்னைப் பற்றி பெருமை பேசும்                             இவர், தன்னை ராஜரிஷி என்று அழைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். குழந்தைகளை பலி கொடுக்கவும் தயங்காத இவருக்கு ஏனோ பசுவின் மீது மட்டும் கருணை இருந்திருக்கிறது. பசுந்தோலால் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளையும் இவர் பயன்படுத்தியதில்லை.மான் தோலால் செய்யப்பட்ட பொருள்களையே பயன்படுத்தி வந்திருக்கிறார். இதனால் இவரை விருந்துக்கு அழைக்கும் வெள்ளைக்காரர்கள்  தங்கள் வீடுகளில் இருக்கும் இருக்கைகளின் தோல் உறைகளை மாற்றிவிடுவது உண்டு.
             ஆங்கிலேய அதிகாரிகளை தன் கைக்குள் வைத்துக் கொள்ள எது வேண்டுமென்றாலும், செய்து தந்த இவர், லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டுக்கு  பங்கேற்கச் சென்ற பொழுது பக்கிங்காம் அரண்மனைக்கு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போது மன்னராக இருந்த  ஐந்தாம் ஜார்ஜ் மன்னரோடு கையுறையோடேயே கை குலுக்கப் போவதாகத் தெரிவித்தார். மன்னர் மிலேச்சன் என்றும் அவரைத் தொட்டால் தனக்கு தீட்டு என்றும் காரணம் கூறியுள்ளார். மன்னரை சந்திக்கத் தாமதமாகச் சென்ற இவர், வயிற்றுப் போக்கு ஏற்பட்டுவிட்டதாகப் பொய் சொல்லி கையுறையோடேயே கை குலுக்கியுள்ளார். அரசியோடு கை குலுக்கும் போது கூட, மெல்லிய காகிதம் போன்ற உறையோடே கை குலுக்கியுள்ளார்.
        ஒரு முறை வைசிராயின் மனைவி ,விருந்தில் இவர் அணிந்திருந்த மோதிரத்தின் மீது ஆசை கொண்டார். அணிந்து பார்க்கச் சொல்லி குடுத்த ஜெய்சிங் , வெள்ளைக்காரப் பெண் அணிந்ததால் தீட்டு ஆகிவிட்டது என்று கூறி ,அதனை தண்ணீரில் போட்டு பட்டுத்துணியால் துடைத்து அவரை அவமானப்படுத்தியுள்ளார். பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவிகளை தனியாக விருந்துக்கு அழைத்து அவர்களை தன் காதல் வலையில் விழ வைப்பதும் இவருக்கு கை வந்த கலையாகும்.அதற்க்கென்றே தனியாக வைர மோதிரங்கள் மற்றும் நகைகளை பயன்படுத்தியுள்ளார்.

தன்னை எதிர்ப்பவர்களையும் மதிக்காதவர்களையும் இவர் பழி வாங்கும் விதமே வித்தியாசமானது. இவர் ரோல்ஸ்ராய் காரை விலைக்கு வாங்க விரும்பிய போது அந்தக் கம்பெனி, உங்களால் வாங்க முடியாது என்று ஏளனமாகக் கூறியதால்,ஐந்து வண்டிகளை வாங்கி தன் வீட்டில் வைக்கோல் ஏற்றிப் போக பயன்படுத்தினார்.
              ஒரு முறை பிக்கானீர் மன்னர் இவரை அவமானப்படுத்தும் எண்ணத்தில் இவரை தவிர்த்து மற்ற எல்லா மன்னர்களையும் விருந்துக்கு அழைத்தார். ஆத்திர்ம் அடைந்த ஜெய்சிங் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நாற்பது மைல் சுற்று வட்டாரத்தில் இருந்து அனைத்து பொருட்களையும் வாங்கி விட்டார். இதனால்பெரிய நெருக்கடி ஏற்பட, அத்தனை மன்னர்களுக்கும் தானே ஒரு பெரிய விருந்து கொடுத்து தன் பெருமையை நிலைநாட்டியுள்ளார்.
              இங்கு மட்டுமல்ல,வெளிநாடுகளிலும் கூட அவர் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார். ஒருமுறை லண்டனில் உள்ள ஒரு புகழ்பெற்ற டெய்லரிடம் தனக்கு ஒரு ஜோடி கோட்சூட் தைத்து தருமாறு கூற, டெய்லரும் பத்து நாள்  ஆகும் என்று கூறிவிட்டார். வேறு வழியின்றி காத்திருந்து தைத்து வாங்கிக் கொண்டு நாடு திரும்பிய ஜெய்சிங், தனது கோட்  பொத்தானை தானே பிய்த்து  எறிந்துவிட்டு,அதை தைத்து தருவதற்க்காக அந்த டெய்லருக்கு தந்தி அடித்து வரவழைத்தார். போக்குவரத்து செலவு,தங்கும் இடம்,பொத்தானை சரி செய்யும் கூலி  அத்தனையும் தருவதாகக் கூறியதால் டெயல்ரும் சம்மதித்து இந்தியா வந்தார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களூக்கு அவரை  இழுத்து அடித்து, பொத்தானை தைத்து வாங்கி. முடிவில் உரிய சன்மானம் குடுத்து அவரை அனுப்பி வைத்தார்.
தனது பகட்டான வாழ்க்கைக்காக மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிக்கொண்டேயிருந்தார்.   தனது சமையல்காரர்களை பாரீஸுக்கு  அனுப்பி புதுவகை உணவுகளை சமைப்பது குறித்து அறிந்துவரச் செய்தார். தன்னைப் போலவே உடை அணிந்த இருபது பேரை அழைத்துக் கொண்டு விருந்துக்கு செல்வதை  வழக்கமாகக் கொண்டிருந்த இவர் சமயங்களில் அவர்களை சாட்டையால் அடித்து விரட்டி,  சிரித்தும் மகிழ்வார்.இவரது அட்டகாசங்களால் மிகவும் துன்பப்பட்டனர் நாட்டு மக்கள்.
    ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்த பிரிட்டிஷ் அரசு  இவரை நாடு கடத்தியது  .இருபது பணியாளர்களுடன் பாரீசில்  வாழ்ந்துவந்த இவர் மதுவுக்கு அடிமையாகி உயிரிழந்தார்.  இவரது உடல் தங்கத் தகடு வேய்ந்த காரில் கொண்டு செல்லப்பட்டது. அப்பொழுது கூட கண்களுக்கு கூலிங்கிளாஸ் ,கைகளுக்கு கையுறையும் போடப்பட்டு இருந்தது.
               இவரைப் போன்ற மன்னர்களின் நெறியற்ற வாழ்வால் நாட்டு மக்கள் அடைந்த துன்பங்களும் நெருக்கடிகளும் இடர்களும் அளவிடமுடியாத அளவில் இருந்தது உண்மை. வீண் பகட்டிலும் டாம்பீகத்திலும் வாழ்க்கையை தொலைத்த இவரைப் போன்ற மன்னர்கள் இன்று வரலாற்றில் இடம் தெரியாது போய்விட்டனர். ஆனால் இவர்களது முட்டாள்தனங்கள் இன்று வரை அரசியல்வாதிகள் மூலமாகக் தொடர்ந்து வருவது மன்னர் ஆட்சியின் மிச்சங்கள் இன்னும் அழிக்கப்படாமல் இருப்பதையே காட்டுகிறது.இவரைப் போன்றவர்களின் வாழ்வு நமக்கு வாழ்வு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்க்குறியது.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

மன்னன் மயங்கும் மல்லிகையின் பெருமைகளும் பலன்களும்

மல்லிகை

மலர்களின் அரசி மல்லிகை

                       செந்தமிழ் நாட்டு தமிழச்சிகளின் மனம் கவர்ந்த மலர் மல்லிகை.. அதன் உருவம், நிறம், மணம் பெண்களை  மட்டுமல்ல ஆண்களையும்  கவர்ந்திழுக்கிறது. அதனால் தான் தமிழ்க் கவிஞர்களின்  காதலிகள் மல்லிகையைச் சூடியே வளைய வர்றாங்க. வெள்ளவெளேர்னு குண்டு குண்டா இருக்குறதுனால இம்மலருக்கு இந்தப்பெயர் வந்திருக்கலாம். தமிழில் மல்லி என்றால்,பருத்தது, உருண்டது, தடித்தது என்று பொருள்.
மல்லிகைல கிட்டத்தட்ட இருநூறு வகைகள் இருக்குது. அதுல  காட்டுமல்லிகை, குண்டு மல்லி, இருவாச்சி, அடுக்கு மல்லி  ,கஸ்தூரி மல்லி, ஊசிமல்லி, ஆராதனா போன்ற  இனங்கள் பரவலா இந்தியாவில் பயிரிடப்பட்டு வருகிறது. 


                 இந்தப் பூக்கள்  இந்தியா இலங்கை,தாய்லாந்து போன்ற நாடுகள்ல அதிகமாக பயிரிடப்படுகிறது. தமிழ்க் கலாச்சாரம் எங்கெல்லாம் பரவியிருக்கோ அங்கெல்லாம் மல்லிகையின் உபயோகம் இருக்கு. பாண்டியர் காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் தமிழ்ப் பெண்கள் மல்லிகையை தலையில் சூடும் வழக்கம் இருந்துக்கிட்டு இருக்கு. வீட்டில் நடக்கும் நல்ல காரியங்களிலும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் குண்டு மல்லிக்கே  முதல் மரியாதை. தமிழர்களின் தினசரி வாழ்க்கையிலும்  அவர்களது வழிபாட்டு முறையிலும் மல்லிகை முக்கியமான இடத்தைப் பிடிச்சிருக்கு. ரோஜாவோ, முல்லையோ,கனகாம்பரமோ மல்லிகையின் அருகில் கூட வரமுடிந்ததில்லை.
               தமிழ்நாட்ல , மதுரையில் மட்டுமே  அதிக அளவில் பயிராகிறது. மதுரை மல்லினா, மல்லிகையே பெருமை கொள்ளும் அளவிற்க்கு பெருமை பெற்றது மதுரை மல்லி.  இதன் நிறமும் மணமும் அருகில் இருப்பவர்களை  மிக எளிதாக ஈர்த்துவிடுகிறது.


             ஆசாமிகளுக்கு மட்டுமல்ல  சாமிகளுக்கும் மல்லிகை மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதனால் தான் பெரும்பாலான கோயில்களில் மல்லிகையை மாலையாகக் கட்டி அணிவிக்கின்றனர் . சாமிய மல்லிகைப் பூவைக் குடுத்து ,ஈசியா கரெக்ட் பண்ணிறலாம்ங்ற  நெனப்பு தான் காரணம் . வேற ஒண்ணும் இல்ல.  பூவைக் குடுத்து பொண்ணுகள தான் கரெக்ட்  பண்ணனுமா என்ன?
             இப்பூவை தலையில் வைத்துக் கொண்டு யாராது நம்மள தாண்டிப் போனாலே மணம் கும்முனு அடிக்கும்.    பத்து அடி தள்ளி நின்றால் கூட அந்த வாசம் நம்மளப்  பிடிச்சு இழுக்கும்.
                  மெட்ராஸ் மல்லினு ஒரு வகை மல்லி இருக்கு. குண்டு மல்லிக்கு பதிலாக சில சமயம் விசேச நிகழ்ச்சிகள்ல உபயோகப்படுத்தப் படுகிறது. இத சில இடங்களில் காட்டு மல்லினு சொல்லுவாங்க. இதுல மல்லிக்குரிய வாசம் சுத்தமா இருக்காது. இத வைக்கிறதும் ஒண்ணுதான்...வைக்காததும் ஒண்ணுதான்.
               அடுக்குமல்லி ....பேருக்கேத்தமாரி இரண்டு அடுக்கா இருக்கும்.  இதுவும் வாசத்துல குண்டு மல்லிக்கு இணையா இருக்கும். மலர்ந்த ஒரு அடுக்குமல்லி பாக்குறதுக்கு சிறு குழந்தையின் விரிந்த கையைப் போல் இருக்கும் .தும்பை நிறத்துல இந்தப் பூ மலர்ந்து இருக்குறப்ப மணம் வீசி ஊரையே அழைக்கும்.  அவ்வளவு நறுமணம்....இருந்தாலும் குண்டு மல்லி அளவிற்கு இத யாரும் தலையில் சூடிக் கொள்வதில்ல.
 
பராமரிப்பு:
        மல்லிகைக் கன்றுகளை நட்ட  ஆறு மாசத்துல இருந்து பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.. ஒரு ஆளு உசரத்துக்கு  புதர் மாதிரி வளர்ந்து நிக்குறப்ப  பச்சைப் பசேல்னு பாக்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும் . ஒரு தடவ வச்சோம்னா இந்தச் செடி குறைந்தது பத்து ஆண்டுகள் வரை நல்ல மகசூலக்  குடுக்கும். சரியான முறையில இயற்கை உரமிட்டு, பராமரிச்சோம்னா  நல்ல லாபம் தரக்கூடிய ஒரு தொழில் இது .ஒரு வருசத்துல குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் .இதற்கான செலவுகளும் கம்மிதான். வருசத்துக்கு இரண்டு தடவயாது கவாத்து செஞ்சாப் போதும். நிலையான வருமானம் நிச்சயம். ஆரம்பநிலையில, பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர்  பாச்சுனாப் போதும். அதுக்கு அப்புறம் ஆறு மாதங்களுக்கு தண்ணீர் இல்லனாக் கூடப் பரவாயில்ல.. செடி தாக்குப் பிடிச்சுரும். களரி மண் மற்றும் உவர் மண் தவிர மத்த எல்லா  வகை மண்லயும்  நல்லா வளரும்  தன்மையுடையது மல்லி.  மதுரைல விளையுற மல்லி,பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


        திருமண காலங்கள்ல மதுர மல்லியோட விலை வானத்த தொட்ரும். விவசாயிகளுக்கும் இதனால் நல்ல விலைக்கு விற்க முடியும். பூவின் அளவ பொறுத்தும் விலை கூடிக் குறையும் .கிலோ இரண்டாயிரம் ரூபாய்க்கு கூட போன நாட்களுமுண்டு.   மதுர மல்லியில் தயாரிக்கப்படும் சென்ட்கள்  நல்ல வாசம் தரும்.
மருத்துவ பலன்கள்:
      மருத்துவத்துக்கு அந்தக் காலத்துல இருந்தே  மல்லிகைப் பூவை  பயன்படுத்திட்டு வந்துருக்காங்க. இந்தப் பூவிலிருந்து எடுக்குற  எண்ணெய் உடல் உபாதைகளுக்கு நல்ல மருந்தாகும். மன அழுத்தம் உள்ள பெண்கள்  மல்லிகப்பூவை  தலைநிறைய  வச்சிக்கிட்டாப் போதும். தானாவே மன அழுத்தம் குறையும். மல்லிகைப் பூ தைலம் டிப்ரஷ்ன், ஸ்ட்ரெஸ், ஆங்சைட்டி, ஃபெடிக் ,மெனோபாஸ் போன்ற நோய்களுக்கு இயற்கையாகவே நல்ல  பலன் தருகிறது.
           மல்லிகைப் பூ இதழ்களை கொதிக்க வைத்து,  அந்த நீரைப் பருகி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துவிடும். இந்தப் பூக்களை நிழலில் உலர்த்தி, பொடி செய்து தண்ணீரோடு கலந்து சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்துவிடும். வாழைத்தண்டு சாறு குடிக்கப் பிடிக்காதவர்கள் இதனை முயற்சி செய்து பாக்கலாம். மல்லிகைப் பூ தண்ணீர் ,வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்களை சரி செய்யும். தினமும் சில மல்லிகைப் பூக்களை உண்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். அரைத்த மல்லிகைப் பூ,வீக்கம் மற்றும் சுளுக்குக்கு நல்ல மருந்தாகும்.மல்லிகைத் தைலத்தை தடவி குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும், உடல் வலி நீங்கும்.
        இது போன்ற இயற்க்கை மருத்துவ முறைகளை தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு நன்மையே விளையும். பக்க விளைவு ஏற்படுத்தும் ஆங்கில மருந்துகளை விட நமது பாரம்பரிய மருத்துவம் மிகச் சிறந்தது. உடல் நலனுக்கும் தீங்கு எதுவும் இல்லாத மருத்துவ முறைகளைப் பின்பற்றி நம் ஆரோக்கியம் காப்போம்..

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

குளிர வைத்த மழை சொல்லும் பாடம்..

மழை

மழைனாலே நம்ம எல்லார்க்கும் ரொம்ப பிடிக்கும்.  தூசியா கிடக்கும் பூமியை, சுத்தப்படுத்தும் தூய்மையான நீர் மழை .    மழைல நனையுற பாக்கியம் கிடைக்குதோ இல்லயோ ,அதை ரசிக்கவாதுசெய்வோம் .வானத்துக்கும் பூமிக்கும் ஒரு நேர்கோட்ட போட்டு இணைக்குற மழையை பாக்குறது மிக இனிமை.

                     இந்த மழை நமக்கு சொல்லித்தர்ற ஒரு பாடம் என்னன்னா, யார் பாராட்டுனாலும் சரி, இல்ல திட்டுனாலும் சரி.. நீ உன் வழில போய்க்கிட்டே இருங்குறது தான்.  சில சமயங்கள்ல மழைய நாம வா வானு யாகம் நடத்திக் கூப்பிடுவோம்.. காதுலயே வாங்கிக்காதது. நம்மள  சுத்தமா மதிக்கவும் மதிக்காது. அதே நேரம், தேவையில்லாத  நேரத்துல பெஞ்சு மொத்தத்துக்கும் அழிச்சுட்டுப் போயிரும்.. இந்தா,  மொத்தமா வச்சு செய்யுதுல கடவுளின் தேசத்த...


                எவ்வளவு நாளா மனசுக்குள்ளயே வச்சு நொந்து வேதனப்பட்டுகிட்டு இருந்துச்சோ தெரில....இப்ப வச்சு செய்யுது..அறிவியல் வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சினு மனுசன் எப்ப பேராசை பிடிச்சு ,தன்னைச் சுத்தியிருக்குற மண்,நதி,மலை,காற்றுனு எல்லாத்தையும் அழிக்க ஆரமிச்சானோ.... அப்ப இருந்தே மனசுல புழுங்கிக்கிட்டு இருந்திருக்கும் போல... மனபாரத்த இன்னமும் கொட்டித் தீத்து முடில.
                   இத இயற்கையின் சீற்றம்னு சொல்றதா இல்ல மனிதத் தவறுனு சொல்றதா இல்ல கடவுளின் கோவம்ங்றதா...?எதுவாக இருந்தாலும் இதுல இருக்குற பெரிய  முக்கியமான விசயம் என்னன்னா சாதி மதம் இனம் மொழி  மாநிலம்ங்ற வேறுபாடு இல்லாம மக்கள் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கிட்டு இருக்குறது தான். ஒருத்தருக்கொருத்தார் ஆபத்து காலத்துல உதவிக்கலனா இந்த மனுசபிறவி  எடுத்ததே  வீணே..அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மனிதம் வென்றத பாக்குறப்ப மனசுல ஒரு நம்பிக்கை விதை முளைக்குது.
                  எந்த மழைல நனையனும் ஆசைப்பட்டோமோ,  எந்த மழையை நாம ரசிச்சோமோ .....அதே  மழை இப்ப மரண பயத்தைக் காட்டிருச்சு... அங்க இருக்குறவங்களால இனிமே மழையை ரசிக்க முடியுமானு தெரில. மழைன்னாலே அய்யோ வேண்டாம்னு கையெடுத்து கும்பிடுற அளவுக்கு நிலைமை ஆகிருச்சு
.
                     மனிதனை விட, மனித அறிவை விட தான்  உயர்ந்தவன்னு  இயற்க்கை  அடிக்கடி வகுப்பு எடுத்துக்கிட்டு தான் இருக்கு... ஆனா நமக்கு தான் அது புரியமாட்டேன்குது.  எப்பொழுதும் இல்லாத அளவில இப்போ அடிக்கடி இயற்க்கைச் சீற்றங்கள் உலகத்தோட ஏதாவது ஒரு மூலையில நிகழ்ந்துக்கிட்டுதான் இருக்கு.
                      2015 ல சென்னையை கவுத்துப்போட்ட பெருமழை,2017ல அமெரிக்காவுல  தன் வேலய காட்டிட்டு, இப்ப திரும்பவும் இந்தியாவுக்கே வந்துருக்கு.
                     மூன்றாவது உலகப்போர்னு ஒன்னு வந்தா அது தண்ணீர்க்காகத் தான் இருக்கும். தண்ணீரை சேமியுங்கள்னு   உலகம் முழுவதும் விழிப்புணர்வு தோன்றியிருக்குற நிலைமைல  இந்த மாதிரி அழிவுகள் நம்ம மனித இனத்தையே மொத்த மொத்தமா அழிச்சுருமோன்னு ஒரு பயம் எட்டிப்பாக்கத்தான் செய்யுது.
                   நம்மைக் கலங்கடிக்கும் இந்த மழை கற்றுத்தந்த பாடங்கள்  நிறைய. இனியாது இயற்கையை பாதுகாத்தா அடுத்த தலைமுறைக்கு  குடிப்பதற்க்கு தண்ணீர் கிடைக்கும்.. இல்லனா  அவுங்க நம்மள  காறிதான் துப்புவாங்க...சோ... வேற வழியே இல்ல.. நாம திருந்தி தான் ஆகணும். நாம புதுசா எதையும் உருவாக்க வேண்டாம்..பட்,இருக்குறத பத்திரமா வச்சுக்கலாமே. பேராசைகள கொஞ்சம் குறைச்சுக்கிட்டு யதார்த்தத்தை புரிஞ்சு நடந்துகிட்டா போதும்.. மரங்கள், மலைகள்,நதிகள்லாம் ரொம்ப சந்தோசப்படும். அதுங்க சந்தோசமா இருந்தா நம்மளயும் சந்தோசமா வச்சுக்குங்க...நாம வாழ்றதே சந்தோசமா இருக்கத்தானே.
                           உயிரோரு இருக்குறவரை வானத்தையும் அளக்குற ஆற்றல் இருக்குற நமக்கு, செத்தபிறகு தேவைப்படுறதெல்லாம் ஆறு அடி நிலமும் தூக்கிட்டுப்போக நாலு பேரும் தான்... அது இருந்தா போதுமே மனித  வாழ்வு அர்த்தம் பெறுமே...நாம பிறந்த நோக்கமும் நிறைவேறும்.

 சோ, இயற்க்கையை பாதுகாப்போம்...சந்ததி வளர்ப்போம்...மனங்களில் நிலைபெறுவோம்..வாழ்க வளமுடன்...

புதன், 15 ஆகஸ்ட், 2018

மண்ணின் மறைக்கப்பட்ட வீரங்கள்

                    சுதந்திர இந்தியா தனது எழுவத்தியிரண்டாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி முடித்திருக்கிறது நேற்று. அடிமை இந்தியாவில், சுதந்திரம் என்பது ஒரு கனவாக இருந்த காலம் ஒன்று இருந்தது. இன்று நாம் சுதந்திரமாக ,இருப்பதற்க்காக அன்று உயிர்த் தியாகம் செய்தவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம்.அவர்களை நினைத்து நன்றி சொல்ல வேண்டிய நாள் இது.

                சுதந்திரப் போராட்டம் என்ற ஒரு நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டு பார்த்தால் ,அதன் முற்பகுதி கிட்டத்தட்ட மறைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.  விடுதலைப் போராட்டம்னாலே ஜான்சி ராணி, பகத்சிங், மங்கள் பாண்டே, காந்தி போன்றவர்கள் நினைவுக்கு வருகிற அளவுக்கு வேலு நாச்சியாரோ, கட்டபொம்மனோ  ,மருது பாண்டியர்களோ,திப்பு சுல்தானோ நம்  நினைவுக்கு வருவதில்லை. அன்றைய தென்னிந்தியப் பகுதிகளில் , ஜான்சியின்  ராணி லட்சுமி பாயின் காலத்துக்கு முன் ,அதாவது கிட்டத்தட்ட 1700 களிலேயே கும்பினிக்காரர்களை எதிர்த்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் பெரிய பெரிய நிலக்கிழார்களும் போராடிக்கொண்டே தான் இருந்திருக்கிறார்கள் . பாளையக்காரர்களின் எழுச்சி, வேலூர்ப்புரட்சி, வீரன் வேலுத்தம்பி, மருது சகோதரர்கள், வேலுநாச்சியார்,  திப்புசுல்தான், பழசி ராஜா போன்றோர் வரலாறு, எளிதில், மறக்கவோ அல்லது மறைக்கவோ பட்டது நமது துரதிர்ஷ்ட்டமே.

                  தங்களை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையனை வெளியேறச் சொல்லி  எழுந்த மக்கள் புரட்சிக்கு முன்னாலேயே , கும்பினிக்காரர்களிடமிருந்து தங்கள்  ராஜ்ஜியத்தை காப்பாற்றிக் கொள்ள குறுநில மன்னர்கள் பலர் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள்.  தற்போது கேரளாவில் உள்ள வயநாட்டுப்  பகுதிகளை  1700களில் ஆண்டு வந்த பழசிராஜா, தன் மக்களின் உரிமைக்காக குரல் எழுப்பினார். தங்கள் மண்ணின் மீதோ,அதில் விளையும் பொருள்களின் மீதோ, அதன் வருவாயின் மீதோ வியாபாரத்திற்க்கு வந்தவர்களுக்கு உரிமையேதும் இல்லை என்று கூறி கப்பம் கட்ட மறுத்தவர் பழசிராஜா. சுதந்திரப்போருக்கான முதல் விதையை போட்டவர் இவரே.

                  கேரளாப் பகுதியில் விளையும் மிளகு, அப்பகுதியின் செழுமை கும்பினிக்காரர்களின் பார்வையில் பட்டதும்,  அப்பகுதியையும் தமது ஆளுகைக்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், அப்பகுதியைச் சேர்ந்த நிலக்கிழார்களையும், குறுநில மன்னர்களையும் தங்களுக்குக் கப்பம் கட்டச் சொல்லி  பணிக்கையில்,  பலரும் பயந்து கப்பம் கட்டிய போது, தனிஒருவனாக மறுத்தார் பழசிராஜா. இவரது மாமாவின் உதவியோடு ஆங்கிலேயப் படை ஒன்று பழசிராஜாவை  கைது செய்ய
அரண்மனைக்கு  வருவதற்க்கு முன் காட்டுக்குள் தப்பிசென்ற பழசி ராஜா அங்குள்ள பழங்குடிகள் மற்றும் சில நிலக்கிழார்களின் உதவியோடு ஒரு கொரில்லாப் படையை உருவாக்கினார்.  இப்படையின் கொரில்லாத் தாக்குதலை சமாளிக்க முடியாத பிரிட்டிஷ் அரசு சமாதானத்திற்க்கு அழைத்து ஒப்பந்தம் ஒன்று போட்டது.. ஆனால் ஒப்பந்தப்படி அவர்கள் நடக்காததால், மீண்டும் போர் வந்தது, இம்முறை இரு பக்கமும் அதிகமான சேதம் ஏற்பட்டது. கடுமையான சண்டைக்குப் பின்னர்  ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் பழசிராஜா. அவர் திட்டமிட்டபடி குறுநில மன்னர்களின் ஆதரவும், சிவகங்கையின் படையும் அவர்க்குக் கிடைத்து இருந்தால் ஒருவேளை ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டம் அன்றிலிருந்தே தொடங்கியிருந்திருக்குமோ  என்னவோ..

சனி, 11 ஆகஸ்ட், 2018

ஆபத்தான ஆன்லைன் கேம்ஸ்

 ஆன்லைன் கேம்ஸ்--

                      நாம  வாழ்ற இந்த இண்டர்நெட் யுகத்துல எவ்வளவோ  முன்னேற்றங்கள்.. எவ்வளவோ கண்டுபிடிப்புகள்....  உலகின் முதல் கணினியை வைக்குறதுக்குன்னே ஒரு பெரிய அறை தேவைப்பட்ட காலம் போய், இன்னைக்கு நம்ம உள்ளங்கைக்குள்ளயே  உலகத்தையே  வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கோம்.
                    ஒரு காலத்துல ,வெளியூர்ல இருக்குறவங்ககிட்ட பேசனும்னா ட்ரங்க்கால் புக் பண்ணி,  காத்திருந்து தான் பேசிக்கிட்டு இருந்தோம் .. ஆனா இப்ப?  நினைச்ச உடனே, உலகத்துல எந்த மூலையிலை இருக்குறவங்ககிட்டயும் , அடுத்த நொடி நம்மளால பேசமுடியுது..  பாத்துக்க முடியுது.  பாத்துக்கிட்டே பேசவும் முடியுது.  இதுக்குலாம் முழு முதற்  காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி தான்.

                 அதுவும் இணையத்தின் அபரிதமான வளர்ச்சி நம்மைக் கொஞ்சம் மிரளவே வைக்கிறது. இந்த வளர்ச்சி ஆக்கத்தை மட்டுமே  தந்திருக்கானு  பாத்தா.... கடவுள் பாதி...மிருகம் பாதிங்கற மாதிரி  நல்லதும் இருக்கு..கெட்டதும் இருக்கு...இதுல இருக்குற கெட்டதுல முன்னாடி வந்து நிக்குறது என்னன்னா .... ஆன்லைன் கேம்ஸ்... இந்த ஆன்லைன் கேம்ஸ் மிக எளிதாக குழந்தைகளையும் இளைஞர்களையும் கவர்ந்து, அவங்கள  அடிமையாக்கிவிடுகிறது.  ஆன்லைன்ல முகம் தெரியா மனிதர்களுடன் சேட்டிங்ல் ஆரம்பிக்கும் குழந்தைகள்  நாளாடைவில், தங்களுடன்  சேட் செய்யும் அந்த நபர்கள் என்ன ... என்ன சொன்னாலும் கீழ்ப்படிய ஆரம்பிச்சுற்றாங்க....விளையாட்டு முற்றி, வினையாய்... அதாவது தங்கள் உயிரயும்கூட  மாய்த்துக் கொள்ள அவர்கள் தயங்குவதில்லை. அந்த அளவிற்க்கு மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.


நீலத் திமிங்கலம்

                   நீலத் திமிங்கலம் அதாவது ப்ளு வேல்ங்ற ஒரு ஆன்லைன் கேம் ஒரு வருடத்துக்கு முன்னாடி வந்து பல  இளம் உயிர்கள பலி வாங்குனது நம்மளுக்கு நல்லாவே ஞாபகத்துல இருக்கும்... இந்த விளையாட்டு விளையாடுபவர்களுக்கு தினம்  கட்டளைகள் அதாவது டாஸ்க் வரும். இதைச் செய்.. அதைச் செய்யுனு ... ஐப்பது டாஸ்க்கள் தரப்படும் .ஒரு  கட்டத்துல  நாம விரும்பினாலும்,  இந்த விளையாட்டிலிருந்து  வெளியே வரமுடியாது...கீழ்ப்படிய மறுப்பவர்கள்  மிரட்டப்படுவதால், வேறு வழியின்றி கடைசிவரை விளையாடியே  தீரவேண்டும். ஒவ்வொரு டாஸ்க்கும் பயங்கராமான அளவில் இருக்கும்...அதுல கடைசியா வர்ற டாஸ்க் தான் கொடுமையிலும் கொடுமை... அவுங்க சொல்றமாதிரி தற்கொலை செய்துகொள்ளச் சொல்லி வரும் இந்த ஆபத்தான விளையாட்டால் நாம்  இழந்த உயிர்கள்  நிறைய.

மோமோ
                       இப்ப புதுசா இதே மாதிரியான ஒரு கேம் வாட்ஸப் மூலமா பரவிக்கிட்டு இருக்கு.  அந்த கேம் தான் MOMO..  சமீபத்துல  இந்த விளையாட்டுனால அர்ஜெண்டினா  நாட்டு பன்னிரண்டு வயது பெண் குழந்தை  பலியாகியிருக்கிறது  மிகவும் வருத்தத்திற்க்குரியது. அந்தக் குழந்தையின் மொபைல் எண்ணுக்கு ஜப்பான் நாட்டு எண்ணிலிருந்து ஒரு நட்பு அழைப்பு வந்திருந்திருக்கு. தன் பெயரை மோமோ என்று சேமித்துக்கொள்ளும்படி  கூறியிருக்கு  அந்த அழைப்பு.  அந்தச் சிறுமியும் அழைப்பை ஏற்றுக்கொண்டப்பின், சேட்டிங்கில் மிக நெருக்கமாகப் பழகி, ரகசியங்களைத்  தெரிந்து கொண்டு,   அந்தரங்க புகைப்படங்களையும் வாங்கிக் கொண்டு தன் விருப்பப்படி அந்தக் குழந்தையை ஆட்டுவித்திருக்கிறது மோமோ.  ப்ளு வேல் போல் கட்டளைகள் செய்யச் சொல்லி தினமும் கட்டளைகள் வந்திருக்கிறது. செய்ய மறுத்தால்,மிரட்டி செய்ய வைத்துள்ளது மோமோ.  இறுதியாக தற்கொலை செய்து கொள்ளும்படி வந்த கட்டளையைப்  பார்த்து, மோமோ சொல்லிய படியே தூக்கு மாட்டிக்கிட்டு  இறந்துட்டா அந்தச் சிறுமி..

                சொர்க்கத்துக்கு போகும் வழி என்று  இறந்துபோன குழந்தைகளின் புகைப்படங்களை  அனுப்பியிருக்கிறது மோமோ. அந்தப் புகைப்படங்களை டவுண்லோட் செய்யுரப்ப, ,அதுல இருக்கும் மால்வேர்கள் மூலமா நம்  மொபைலின் முன் பகுதியில் இருக்கும் கேமரா, மோமோவுடைய கண்ட்ரோலுக்குப் போய்விடுகிறது.  அதனால்  நாம் செய்வதையெல்லாம்  உடனுக்குடன் தெரிந்து கொள்கிறது மோமோ.  இந்த தகவல்களை வைத்துக் கொண்டு மிரட்டியும் மூளைச்சலவை செய்தும் குழந்தைகளைத்  தன் கட்டுப்பாட்டுக்குள்  வைத்துக் கொள்கிரது இந்த மோமோ.. இந்த விளையாட்டு தற்பொழுது, உலகம் முழுதும் பரவ ஆரம்பித்திருக்கிறது .மேலும் உயிர்களை பறிக்குறதுக்கு முன்னாடி,   நாம் நம் குழந்தைகளைக்  காப்பாற்றவேண்டும்.  நம் குழந்தைகளின் மொபைலில் இதுபோன்ற பெயரில் எண்கள் சேமிக்கப்பட்டிருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டியது அவசியம். மேலும் ,குழந்தைகளோடு தினமும் சிறிது நேரம் செலவழித்து அவர்களின் அன்றாட செயல்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும். துரிதமான நடவடிக்கையால்  இன்னொரு உயிரிழப்பை தடுக்க முடியும். இந்த விளையாட்டை யார் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை..உலகெங்கும்  இது குறித்து தீவிரமாக  விசாரித்து வருகிறார்கள்..

கிகி சேலஞ்ச் 

     கேம்மா இல்லாம சாலஞ்சுங்கற பெயருல வந்து உயிர் பறிச்சிக்கிட்டு  இருக்குற  இந்த  புது விளையாட்டு  KIKI   சேலஞ்ச்....இது என்னன்னா.. நாம கார்ல போகுறப்ப in my feelings ங்ற பாடலை ஒலிக்க விட்டு, அந்தப்  பாடலில் வரும் kiki... do you love me?ங்ற வரிகளுக்கு ஓடும் கார்ல இருந்து இறங்கி காரின் வேகத்துக்கு ஏற்ப ஆடிக்கொண்டு வரவேண்டும். இதை இன்னொருத்தர் ஒளிப்படமாக எடுத்து இணையத்துல அப்லோட் பண்ணனும். அப்படியே நாம ஒரு நாலு பேருக்கு இந்த சேலஞ்ச குடுக்கணும்.  இப்படியே  வைரலாக  பரவ ஆரம்பித்தது இந்த சேலஞ்ச்.  சில ஹாலிவுட்  நடிகர்களும் இந்த சேலஞ்ச்  ஏத்துக்கிட்டு ஆடிருக்காங்க. மிக வேகமா பரவி வரும் இந்த சேலஞ்ச்னால் ஒரு சிலர் எதிர்பாராத விதத்துல உயிரிழக்க நேரிட்டது தான் மிகப்பெரிய துயரம். பின்னாடி வரும் வண்டிகள்னால் ஏற்ப்பட்ட விபத்துக்ளே இதற்க்குக் காரணம். இதில் பாதிப்புக்குள்ளாவது நம் இளைய சமுதாயமே.

                இளைய சமுதாயத்திடம் தற்போது ஒருவித ஆபத்தான போக்கு வளர்கிறது .  மற்றவர்களின் கவனத்தைக்  கவருவதற்க்காக, சமூக வலைத்தளங்களில் கிடைக்கக்கூடிய லைக்ஸ் மற்றும் ஷேர்கள் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டே வருது . எதிர்பாலினத்தை ஈர்க்கனும்ங்ற  ஆர்வக்கோளாறுல அர்த்தமில்லாத ,அறிவுக்குப்  புறம்பான செயல்கள்ல ஈடுபட்டு ,அத யூ ட்யூப்ளயோ அல்லது முகநூல்லயோ அல்லது ட்விட்டர் ,இண்ஸ்டாகிராம்,டம்ளர் போன்ற எண்ணற்ற வலைதளங்கள்ல பதிவா போடுறத ஒருபெரிய சாதனையா நினைக்குறாங்க. இந்த லைக்ஸ் ஷேர்கள வச்சு ஒரு நயாபைசா  கூட   சம்பாதிக்கமுடியாதுனு  தெரிஞ்சிருந்தும் , மற்றவர்களின்  கவனத்தை ஈர்க்கனும்னு சிலர் ஆபத்தான இடங்களில் நின்னுக்கிட்டு செல்ஃபி எடுக்குறேன்னு தங்கள் உயிரயே இழந்துருக்காங்க..

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

அன்பை முதலீடு செய்வோம்

முதலீடு 


                    முதலீடு  என்ற உடனே நமக்கு  பொதுவா என்ன  ஞாபகத்துக்கு   வரும்? வங்கியில நாம போடுற முதலீடு தான் நம்ம ஞாபகத்துக்கு வரும்  இல்லயா..  ஆனா,  நான் இங்க சொல்ல போறது  பணத்த முதலீடு செய்றத பத்தி இல்ல. அன்பை முதலீடு செய்றதபத்தி. புதுசா இருக்குல.. அன்பை முதலீடு பண்ணா ... என்ன பண்ணலனா என்ன.. அது ஒரு விசயமானு தோணுதுல. அப்படித்தான் தோணும்..

                   அன்பை  எப்பிடி முதலீடு செய்றது? அதுக்குனு வங்கி இருக்கானு எத்தன பேரு சிந்திச்சீங்க? அன்பை முதலீடு  செய்யத் தேவையானது ஒன்றே ஒன்று தான். அன்பு கொண்ட மனம். நமக்கு பிரியமானவர்களிடம் அன்பை முதலீடு செய்ய வேண்டும். 
 
                  உறவுகளை வளர்க்கத் தேவையான அன்பை முதலீடு செய்து கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த உறவில் ஏற்படும் களைகளை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளமுடியும். உதாசீனப்படுத்தப்படும் உறவுகளில், எதிர்பார்ப்புகள் ,அந்த உறவையே  அசைத்துவிடும். சரியாக வளர்ச்சியடையாத பயிர்போன்ற அந்த உறவுகளில் நம் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொள்ளும் போது தான் நம்  வாழ்வில் துன்பங்கள் வருகிறது.

                  எப்படி வங்கியில் தொடர்ந்து  போடப்படும் தொகையால் நமது இருப்புநிலை கூடிக்கொண்டே இருக்கிறதோ, அது போல் நம் உறவுகளிலும் அன்பை தொடந்து முதலீடு செய்து கொண்டே  வரும்போது  உணர்வுரீதியிலான இருப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். நம் வாழ்விலும் வசந்தம் தொடர்ந்து வீசும்.


ஆனால், இதற்கு மாறாக நடப்பதே நம் இயல்பாகிவிட்டது.  உறவுகளை சரிவர பாதுகாக்காமலேயே அது நிலைத்து  நிற்கும் என்று நாமாகவே முடிவு செய்து கொள்கிறோம். இதற்கு சரியான எடுத்துக்காட்டு திருமணபந்தத்தின் மூலம் வரும் உறவு.

             ஆயிரம் காலத்துப்பயிர் என்று  நாம் போற்றும் இந்த உறவுநிலையில் நம்மோடு இணையும் அந்த உறவை நாம் சரிவர பேணிகாக்கிறோமோ என்று நம்மை நாமே ஒருமுறை இந்தத் தருணத்தில் திரும்பிப் பார்த்துக்கொள்வோம் .நாம் இந்த உறவை மிக எளிதாக எடுத்துக்கொள்கிறோம். அசாத்திய நம்பிக்கை நம்மைவிட்டுப்போகாது என்று இந்த உறவை வளர்க்க பெரும்பாலானோர் முயல்வதேயில்லை.  அதே நேரம் எடுத்துக்கொள்ள மட்டும் விரும்புகிறோம்.
             எந்தவித முதலீடோ சேமிப்போ  இல்லாமல் வங்கியிலிருந்து  எப்படி எடுக்கமுடியும்? முடியாதுல.  பயிர் வளரத் தேவையான உரம் போடாம விளைச்சல் கிடைக்குமா?  கிடைக்காதுல... அதனால்  நம் வாழ்க்கைல நாம் சந்தோசமா இருக்கனும்னா, நிம்மதியா குழந்தை குட்டிகளோட இன்பமா பொழுது போக்கனும்னா அன்பை மறக்காம விதைக்கனும்.

            உணர்வுகள் இருப்பில் இல்லனா, எதுக்கு எடுத்தாலும் சண்ட சச்சரவு தான். ஒவ்வொரு வார்த்தைகளும்  புதுவடிவம் எடுத்து  ,நம்மை தாக்கிக்கொண்டே இருக்கும். பூதக்கண்ணாடி கொண்டு நாம் எடை போடப்படுவோம். நம்ம சொற்களே நமக்கு  எமனா வந்து நிற்க்கும்., நாம் சொல்ல வருவது என்ன என்ற நோக்கங்கள் அடிபட்டு, வார்த்தைகள் உயிர்ப்பெற்று யுத்தமிடத் தொடங்கும். கண்ணி வெடிகளுக்குள் புதைக்கப்பட்ட நிலம் போல் நம் வாழ்வு ஆகிவிடும்
.
             இவையெல்லாவற்றிற்க்கும் ஒரே தீர்வு அன்பை முதலீடு செய்வதுதான். எப்படி முதலீடு செய்வது என்ற கேள்வி நமக்குள் வருகிறதல்லவா? மிகவும் எளிதே அதுவும் . நம் குடும்பத்தோடும், நம் பிரியமானவர்களோடும், அன்றாடம் நம் நேரத்தை செலவிட்டால் போதும். ஒன்றாக நேரத்தை செலவிடுதல் என்பது ஒன்றாக  அமர்ந்து, மொபைல் போன் அல்லது லேப்டாப் அல்லது டேப்லட்  என்று இருப்பது இல்லை.  ஒருவருக்கொருவர் சிரித்துப்  பேசி,கலந்தாலோசித்து,அன்றைய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளும்  தரமான நேரமாக அது இருக்க  வேண்டும்.
இதனால் என்ன நடந்துவிடும் என்று கேட்பவர்கள்,ஒருமுறை இதை செய்து   பார்த்தால் போதும் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.  மனங்களிடையே இருக்கும் இடைவெளிகள் குறைந்து, மனங்கள் மலரத் தொடங்கும் .நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி,ஆனந்தம், நிம்மதி என்று அளவில்லா நன்மைகள் தேடி வருவதை நம்மால் உணர முடியும்.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

GERIATRICKS முதியோர் நலன்

ஜீரியாட்ரிக்ஸ்


                    கேள்விப்படாத பெயர்போல இருக்குதுல...நவீன  மருத்துவத்தில் வயது முதிர்ந்தவர்களுக்கான  உடல்நலன் காக்கும் சிகிச்சைக்குத்தான் இந்தப் பெயர் .  இதற்க்கான  சிறப்பு மருத்துவர்கள்  ஜீரியாட்ரிசியன்.                                                             முதியவர்களுக்கு வரக்கூடிய நோய்களை கண்டறிதல்,
அதற்க்கான சிகிச்சை அளித்தல் மற்றும் நோய்கள் வராது தடுத்தல் போன்றவற்றில் முறையான  சிறப்புப் பயிற்சி பெற்றிருப்பார்கள். மருத்துவத்துறை ,தொழில்நுட்பத்துறை மற்றும் சத்தான உணவு பழக்கவழக்கங்களில்  ஏற்பட்ட  காரணமாக இன்று உலகம் முழுவதும் 65 வயதுக்கு  மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காடுக்கும் மேல் அதிகரித்துள்ளது. எனவே முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவம் பற்றி அறிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
                          நமது உடலில் வயது கூட, கூட  சில பல மாற்றங்கள் ஏற்படுகிறது. பொதுவாக பெரியவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையோ ,மருந்துகளோ வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் போது ,தேவையான அல்லது எதிர்பார்க்கும் பலன் தருவதில்லை.  பொது மருத்துவரோ அல்லது குடும்ப மருத்துவரோ சராசரியான உடல் நலத்தோடு இருக்கும்  முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியும். ஆனால் வயோதிகம் காரணமாக வரக்கூடிய சில நோய்களுக்கு அதற்க்குறிய சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதே நல்லது. அதனால் வயதில் மூத்தவர்களுக்கான இந்த சிறப்பு மருத்துவம் அதிக கவனம் பெறுகிறது.
                    முதியோர் மருத்துவர்களுக்கான தேவை இந்தியா  போன்ற வளர்ந்து வரும் நாட்டில்  மிகவும்  தேவை. மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில் வரும் காலங்களில் நவீன மருத்துவத்தின் விளைவாக முதியோர்களின்  எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதிலும் முதியோரின் வாழ்க்கை, பல காரணிகளால் அவதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள காலகட்டத்தில்,  இந்த மருத்துவர்களின் தேவை அதிகரிக்கிறது
                 முதுமை ஒரு மனிதனின் வாழ்வில் எதிர்பாராத பல விளைவுகளைக் கொண்டு வந்துவிடுகிறது.. அதுவரை அவன் பார்த்து ரசித்த அவன் புறத்தோற்றத்தில் நிறைய மாறுதல்கள்... தோல் சுருங்கிப் போதல், கேட்கும் சக்தி குறைதல், எளிதில் புரிந்து கொள்ளும் திறன் குறைதல், செரிமானக் குறைபாடு,சுவையுண்ர்ச்சிக்  குறைதல் , நரம்பு மண்டலம் பாதிப்படைதல், வேகமாக செயல்பட முடியாதிருத்தல் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,  தனிமை, வருமானம் இல்லாதிருத்தல் இவையெல்லாவற்றாலும் வரக்கூடிய உளவியல் பாதிப்புகள்  என்று சொல்லிகொண்டே போகலாம்..வயோதிகத்தில் மனிதனை எளிதில் நீரிழிவு, இதய நோய், மூட்டுவலி இரத்த அழுத்தம்  போன்றவை  தாக்குகிறது.
                   இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது இவர்களுடைய உடல் மற்றும் மனநலத்தையும் பரிசோதித்துவிட்டே மருந்துகள் தரவேண்டும். இவர்கள்  இருப்பிடம்,உடன் இருப்பவர்களிடம் இவர்களுக்கு உள்ள மனநிலை, உடனிருப்பவர்களின் அணுகுமுறை,இவர்கள் ஏற்கெனவே சாப்பிட்டுவரும் மருந்துகள், இவர்களின் வாழ்க்கைத்தரம், இவர்களின் பொழுதுபோக்கு போன்ற பல விசயங்களையும் கவனத்தில் கொண்டே சிகிச்சைகள் அளிக்கப்படவேண்டும்.
                   சில முதியவர்கள் சுயமருத்துவத்தை மட்டுமே நம்புவார்கள்.. கை வைத்தியம் மற்றும் சுயமருத்துவத்தை முதியவர்கள் குறைத்துக்கொள்ளவேண்டும். தளர்ந்துவிட்ட தன் உடலின்  தேவை குறித்த போதுமான தெளிவு இல்லாத நிலையில் அவர்கள் தங்களுக்கு தாங்களே சுயமாக மருத்துவம் செய்து கொள்வதோ அல்லது பழைய மருந்துச்சீட்டை வைத்து மருந்துகள் வாங்கி உபயோகிப்பதோ அவர்களை சிக்கலில் கொண்டுவிடும்.   அதனால் முறையான மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் எடுக்கக்கூடாது
                  தங்கள் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் சிலர்,வாழ்வின் மீதான சலிப்பில்  மருத்துவர்களோடு  சரியாக ஒத்துழைக்க மாட்டார்கள்.அவர்களிடம் அன்பாக பேசி,நம் வழிக்கு கொண்டு வரவேண்டும்.  இவர்களுக்குத் தேவையான கவுன்சிலிங் அவ்வப்போது சரியான முறையில் கொடுக்க வேண்டும்.

               இவ்வாறு முதியோர்களின் உடல் நலன்,மனநலன்  பேணிக்காத்து,அதற்கேற்ற மருந்துகளைத் தரும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். இத்தகைய மருத்துவர்களை நாம் ஜீரியாடிரிஸ்ட் என்றழைக்கிறோம். மருத்துவர் மட்டுமே இவர்களுடைய் நோய்களை குணப்படுத்திட முடியாது. குடும்பத்தினரின் பூரண ஒத்துழைப்பும் வேண்டும். அவர்களின் அரவணைப்பே மிகச் சிறந்த மருந்தாகும். அவர்களோடு நேரம் செலவிட வேண்டும். அவர்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட்டனவா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். முதியவர்களின் உடலில் நீர்ச்சத்து குறையாது பார்த்துக் கொள்ளவேண்டும் . மனதளவில் சந்தோசமாக வைத்துக் கொள்ளவேண்டும்.  இதனால்  மன அழுத்தம் வராமல்  தவிர்க்கமுடியும்.
                   ஜீரியாட்ரிஸ்ட்களின் உதவியோடு முதியவர்கள் தங்கள் வாழ்வின் இறுதிப்பகுதியை நிறைவாக வைத்துக் கொள்ளமுடியும். மனநிறைவாக வாழமுடியும். தங்களைச் சுற்றி இருப்பவர்களோடு இணக்கமாக வாழ்ந்தாலே பாதி நோய்கள் குணமடையும். மருந்துகளையே உணவாக சிலர் உண்பர். சிலர் உணவையே மருந்தாக உண்பர். சிலர் உடல் மருந்துகளை ஏற்றுக்கொள்ளும். சிலருக்கு வீரியமான மருந்துகளை கொடுக்க முடியாது.அந்த மாதிரி சமயங்களில் அவர்களுக்கு பிசியோதெரபி மட்டுமே கொடுக்க வேண்டிவரலாம். இவையெல்லாவற்றையும் தகுந்த ஜீரியாட்ரிஸ்ட்களின் அறிவுரையின்படியே செய்ய வேண்டும்.

                         குழந்தை நல மருத்துவர் போல் வயோதிகர் நல மருத்துவர்களிடம் மட்டுமே முதியவர்களை  பரிசோதிக்கவேண்டும்.அதனால் அவர்களது முதுமையை அவர்களால் ரசிக்கமுடியும். ஒவ்வொரு நொடியிலும் வாழமுடியும் .இன்றைய இளைஞர்களே  நாளைய முதியவர்கள் என்பதை நாம் மறந்திடக் கூடாது. முதஇயவர்கள் நம் சொத்து. அவர்களை நாம் போற்றி,பேணி காப்போம்..


வியாழன், 2 ஆகஸ்ட், 2018

வீட்டு பட்ஜெட்

பட்ஜெட்


நமக்கு மிகவும் தெரிந்த சொல்... அதே சமயம் நாம் கண்டுக்காத சொல் கூட..   பட்ஜெட்னா  நிதி நிலை பற்றிய ஒரு அறிக்கைனு நம்ம எல்லார்க்கும் நல்லாத் தெரியும். ஒவ்வொரு நாட்டுலயும் வருசத்துக்கு ஒரு தடவ பட்ஜெட் , அதாவது வரவு செலவு கணக்கு பாப்பாங்க. எவ்ளோ வந்துருக்கு ,எவ்ளோ போயிருக்கு ,எவ்ளோ மிச்சம் இருக்குனு பாத்து  நிதிநிலை  அறிக்கை ஒண்ணு தயார் பண்ணுவாங்க. இது மூலமா நாம என்ன செலவு செஞ்சோம், எந்த செலவ குறைக்கணும், எதுக்கு அதிக பணம் ஒதுக்கணும் , இன்னும் என்ன என்ன அவசிய செலவுகள்  செய்யனும், அதுக்கு எவ்வளவு ஒதுக்கணும்ங்ற ஒரு  விரிவான அறிக்கை இது.  இத பொறுத்து தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி  பெரும்பாலும் அமையுது..

          நாட்டுல மட்டுமில்ல, பெரிய பெரிய அலுவலகங்களிலும் கூட பட்ஜெட் போடுறது வழக்கம்.  இன்னைக்கு பணம் சம்பாதிக்க நிறைய வழிகள்  இருக்கு..பணம் சம்பாதிப்பது எளிதாகவும் இருக்கு...ஆனா சம்பாரிச்ச இந்தப் பணத்த முறையா செலவு செய்யுறவங்க எண்ணிக்கை ரொம்ப குறைவு.. பதினைந்து  வருடங்களுக்கு முன்னாடிலாம் சம்பாதிக்க  அதிகமா உழைக்க வேண்டி இருந்துச்சு.. ஆனா இப்போ அப்படி இல்ல.  சம்பாத்தியம் எளிதாகிருச்சு... செலவுகள் அதவிட எளிதாக செய்ய முடியுது..
பதினைந்து வருசங்களுக்கு முன்னாடி ஒருத்தர் ரிடையர்டு ஆகுறப்ப வாங்குற சம்பளத்த இப்போ உள்ள இளைஞர்கள்  இருபத்தி ஐந்து வயசுலயே வாங்கிற்றாங்க.  அதுனால அவுங்களுக்கு பணத்தோட அருமை தெரியமாட்டேங்குது.


               எவ்ளோ எளிதா சம்பாதிக்குறாங்களோ அவ்ளோ எளிதா செலவும் செய்யுறாங்க.  எளிதாக கிடைத்த ஒன்று  எளிதாக கைவிட்டுப் போய்விடுகிறது.. இதை எப்படி சரி செய்வது?

    குழந்தைகள் சொல்லிக் குடுப்பதை விட பார்ப்பதை,  எளிதாக கத்துக்குறாங்க .ஒவ்வொரு வீட்டுலயும் பட்ஜெட் போடுற பழக்கம் இருந்திருந்தா  இளைஞர்கள்  பெற்றோர்களிடமிருந்தே பழகிருப்பாங்க. அதனால் அவுங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைத்திருத்திருக்கும் .அவுங்க  கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தது வீணாக செலவு ஆகிருக்காது. ஆனா அத பெற்றோர்கள் அத செய்வதில்லை..
                பிள்ளைகள் கேக்குறதயெல்லாம், கேக்குறப்பலாம்  பெற்றோர்  வாங்கித்தற்றதுனால பிள்ளைகளுக்கு தனக்கு எது அவசியம், எது முக்கியத் தேவைங்ற ஒரு விசயம் தெரிவதேயில்லை.. அதனோட பலன் தான் இன்னைக்கு இருக்கும் இளைய சமுதாயம் பணத்தின் மதிப்பு தெரியாமலேயே ஆடம்பர பிரியர்களா ஆகிற்றாங்க..வரவு செலவு எழுத தெரிஞ்சுகிட்டா போதும்,அவசியம் எது, அனாவசியம் எதுனு எளிதாக புரிஞ்சுகிடுவாங்க...பணத்தயும் சேமிக்க ஆரம்பிச்சுருவாங்க...
பெற்றோர்கள்  பிள்ளைகளிடம் இந்தப் பழக்கத்தை ஊக்குவிக்கனும்.

              வரவு செலவு கணக்கு எழுதுவது ஒண்ணும் பகீரதப் பிரயத்தனம் இல்லை.நம் அன்றாட வரவு செலவுகளை ஒரு  நோட்டிலோ இல்ல டைரிலயோ  எழுதி வந்தா போதும். வரவுகள் ஒரு பக்கமும் செலவுகள் ஒரு பக்கமும் எழுதணும். ஒவ்வொரு மாத முடிவிலயும்  கணக்குப் பார்த்து இரண்டு பக்கமும் வருகிற தொகை சரியா இருக்கானு பாத்தா போதும்..நம் குடும்பத்து  நிலமை  எப்படி இருக்குனு தெரிஞ்சுரும். வரவை விட செலவு அதிகம் வந்தால், எந்த செலவு அதிகம் செஞ்சுருக்கோமோ  அந்த செலவை குறைக்க வேண்டும்.. அநாவசிய செலவுகளை  நிறுத்திவிட வேண்டும்...

                செலவ விட வரவு அதிகமா இருந்தா நம்மள நாமளே தட்டிக்குடுத்துக்கலாம்.  ஏன்னா,செலவளிக்கப்படாத தொகையும் ஒரு வருமானம் தான். அதிகப்படியான இந்தத் தொகையை வங்கியிலயோ இல்ல அஞ்சலகத்திலயோ ஒரு கணக்கு துவங்கி மாதமாதம் போட்டுக்கிட்டே வந்தா நாளடைவில நம்முடைய உபரி வருமானம் நமக்கு ஒரு நல்லத் தொகையை சம்பாதிச்சுக் குடுக்கும்..இது மூலமா நம்முடைய வாழ்க்கைத்தரம் மேலேறும்.. நாமளும் இந்த உலகை சுற்றி வர வேண்டாமா... விலையுயரந்த கார்கள்ல பவனி வர வேண்டாமா.. அதுக்கான முதல் அடியை இன்றே  எடுத்து வைப்போம்.. இன்றே வீட்டுக்கான பட்ஜெட் போடுவோம்...
நம் வாழ்க்கையை நாமே கட்டமைப்போம்... வாழ்க வளமுடன்...

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...